ஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்
ஊட்டி: ஊட்டி மலை ரயில் பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கியது. இதனால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கடந்த 10ம் தேதி ஊட்டி மலை ரயில் காட்டேரி என்ற பகுதியில் பழுதாகி நின்றது. இதையடுத்து அதை சரிசெய்ய ரயில்வே ஊழியர்கள் 8 பேர் டிராலியில் சென்றனர். அப்போது ட்ராலி கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 ஊழியர்களில் பரிதாபமாக பலியாயினர்.
இதனால் மலை ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ரயில் பாதை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. கோடை விடுமுறையை கழிக்கவும், ஊட்டியின் அழகை பார்க்கவும் மலை ரயிலை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் மலை ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் காலை 7.30 மணிக்கும், சிறப்பு ரயில் காலை 9 மணிக்கும் இயக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.