பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு இருந்த இறுதித் தடையும் நீங்கியது
டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் இட ஒதுக்கீடுக்கான அனைத்து தடைகளும் நீங்கின.
ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இடைக்காலத் தடையை நீக்கக் கோரி மத்திய அரசு மனு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடி செய்து, இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சேமா, நவ்லோகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கொல்கத்தா உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டது.
இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுக்கு இருந்த தடைகள் அனைத்தும் விலகியுள்ளது.
அர்ஜூன் சிங் வரவேற்பு:
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது. இதை வரவேற்கிறேன் என்றார்.
இதற்கிடையே, இட ஒதுக்கீட்டை சுமூகமாக மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களிலும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றங்களில் யாரேனும் மனு செய்தால், மத்திய அரசைக் கேட்காமல் இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அனைத்து மாநில உயர்நீதிமன்ற அரசு வக்கீல்களுக்கும் சட்டத்துறை மூலமாக மனித வள மேம்பாட்டுத்துறை கடிதம் எழுதவுள்ளது.












Click it and Unblock the Notifications