சென்னையில் கடும் வெயில் - 2 நாட்களுக்கு அனல் வீசும்

கத்திரி வெயில் தமிழகத்தில் உக்கிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடும் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.
சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வருவ தால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். நேற்று மாநிலத்திலேயே அதிகபட்சமாக அங்கு 108 டிகிரி வெயில் பதிவானது.
சென்னையில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் அனல் காற்று குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், காலை வேளையில் நிலக்கற்று வீசும். மாலையில் கடல்காற்று வந்ததும் வெப்பத்தின் அளவு குறைந்து விடும். கடல் காற்று வீச தாமதமாகும் சமயங்களில் வெயிலின் அளவு அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் அதிகமாகவே உள்ளது. இதேபோல நிலக்காற்றும் வேகமாக வீசுவதால், கடல்காற்று சென்னை நகருக்குள் எளிதாக நுழைய முடியவில்லை.
மேலும் கடல்காற்றின் வீச்சு அவ்வளவு தீவிரமாக இல்லை. இதனால் நிலக்காற்றின் வெப்பநிலை குறையாமல் இருக்கிறது. இந்த வெப்பத்தின் காரணமாக சென்னையில் வெயில் கொளுத்துகிறது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக 108 டிகிரி வெயில் பதிவாகி இருக்கிறது. இதே நிலை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும். இந்த தொடர் வெப்பத்தின் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் கருமேகங்கள் உருவாகி இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
சென்னையில் நேற்று நுங்கம்பாக்கத்தில் 107.78 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 108.14 டிகிரியும் வெயில் அளவு பதிவானது.












Click it and Unblock the Notifications