For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதார்த்தங்களின் விலையைக் குறைக்க ஹோட்டல் அதிபர்கள் முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: உணவுப் பதார்த்தங்களின் விலையைக் குறைக்க தமிழ்நாடு ஹோட்டல் அதிபர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது. ஒரு வாரத்தில் உணவுப் பதார்த்தங்களின் விலை குறைக்கப்படும் எனவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஹோட்டல் அதிபர்கள் சங்க நிர்வாகிகள், தமிழக உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலுவை நேற்று சந்தித்துப் பேசினர். ஹோட்டல்களில் உணவுப் பதார்த்தங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர் வேலு ஏற்பாடு செய்திருந்தார்.

கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் வேலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சமையல் எண்ணெய், தானியங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே ஹோட்டல் அதிபர்களும் உணவுப் பதார்த்தங்களின் விலையைக் குறைக்க முன்வர வேண்டும். இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வெளியூர்களுக்குச் செல்வோர் பெரும் பலன் அடைவர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் இதேபோன்ற ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. உணவுப் பதார்த்தங்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்று அப்போது ஹோட்டல் அதிபர்களிடம் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த ஒரு வருடமாக விலைக் குறைப்பு திருப்திகரமாக இல்லை.

அதேசமயம், ஹோட்டல் நடத்த உரிமம் பெறுவதில் தங்களுக்குள்ள பிரச்சினைகள் குறித்து ஹோட்டல் அதிபர்கள் கவலை தெரிவித்தபோது அதை முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க உதவினேன்.

அதன் பின்னர், மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையரிடமிருந்து ஆட்சேபனை இல்லை சான்றிதழ் பெற்றால் உடனடியாக உரிமம் வழங்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்பதை ஹோட்டல் அதிபர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கும், பிற மாநகரங்களுக்கும் வருவோர் பெரும்பாலும் சாதாரண மக்கள், தினக்கூலிகள்தான். ஹோட்டல்களில் சாப்பிடாமல் அவர்களால் இருக்க முடியாது. குறிப்பாக தமிழக மக்கள் அதிகம் சாப்பிடும் பொங்கல், பூரி, வடை போன்றவற்றின் விலையை கணிசமாக குறைத்தாக வேண்டும். இவற்றின் விலை மிகவும் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதை அரசு புறக்கணித்து விட முடியாது.

இதுகுறித்து ஹோட்டல் அதிபர்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அவர்களும் டீ உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்களின் விலையைக் குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். ஒருவாரத்தில் தங்களது முடிவை தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளனர் என்றார்.

சென்னையில் தற்போது பிரபல ஹோட்டல்களில் ஒரு டீயின் விலை குறைந்தது ரூ. 10 ஆக உள்ளது. காபியின் விலை ரூ. 11 ஆக உள்ளது. ஒரு சாம்பார் வடையின் விலை ரூ. 15 ஆக இருக்கிறது.

சாதாரண சாப்பாடு (அளவுச் சாப்பாடு) விலை ரூ. 45 முதல் 65 வரை உள்ளது. ஒரு செட் இட்லி (2) ரூ. 10 முதல் 15 வரை உள்ளது. சாதாரண தோசையின் விலை ரூ. 20 முதல் 25 வரை உள்ளது. ஸ்பெஷல் தோசை என்றால் ரூ. 40 வரை தாளித்து விடுகிறார்கள். ஊத்தப்பத்தின் விலை ரூ. 35 முதல் 40 வரை உள்ளது.

--

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X