பிரிட்டனில் மேயராக இந்தியப் பெண் தேர்வு!
லண்டன்: இந்தியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகர மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆசிய பெண் ஒருவர் இங்கிலாந்தில் மேயர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரத்தின் மேயராக இந்தியாவைச் சேர்ந்த மஞ்சுளா சூட் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 1970ம் ஆண்டு திருமணமாகி லீசெஸ்டர் நகரில் குடியேறினார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சுமார் 20 ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றிய மஞ்சுளா சூட், கடந்த 1996ல் அரசியல் பிரவேசம் செய்தார். தனது அரசியல் பிரவேசம் குறித்து மஞ்சுளா கூறுகையில், அரசியலில் நுழைந்தபோது பல சவால்களை சந்தித்தேன், அவற்றை முறியடித்தேன். மேயர் பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவ்வளவு எளிதாக இந்த பதவி எனக்கு கிடைக்கவில்லை. இதை சிறந்த வாய்ப்பாக கருதி செயல்படுவேன் என்றார்.
லீசெஸ்டர் நகரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்தி முடிப்பதுதான் எனது முக்கிய, முதல் வேலை என்கிறார் மஞ்சுளா.