கர்நாடக கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 13 ஆனது
கோலார்: கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
கோலார் மாவட்டம் நரசபுரா மற்றும் மாலூர் தாலுகாவில் உள்ள கே.ஜி.தியாகல் கிராமம் ஆகியவற்றில் நேற்று கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் நேற்று பரிதாபமாக பலியானார்கள்.
பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
தேர்தலையொட்டி வழங்கப்பட்ட இலவச சாராயத்தைக் குடித்துத்தான் இவர்கள் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது. கோலாரில் கடந்த 10ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதையொட்டி அங்கு பல்வேறு கட்சிகள் சார்பில் கள்ளச்சாராயம் தாராளமாக வழங்கப்பட்டது. அப்பாவி கிராம மக்கள் இவற்றை வாங்கிக் குடித்துள்ளனர்.
அப்படி வழங்கப்பட்ட சாராயத்தை குடித்துதான் 13 பேர் உயிரிழந்திருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.