குழந்தைகளுக்கு தீ வைத்து தாயும் தற்கொலை
தூத்துக்குடி: குடிகார கணவனால் மனமுடைந்த பெண் தன் 2 குழந்தைகள் மீது கெரசின் ஊற்றி பற்றவைத்து தானும் தற்கொலை செய்துகொண்டார். இதில் ஒரு குழந்தை பரிதாபமாக இறந்தது.
தூத்துக்குடி முத்தையாபுரம் பேரின்ப நகரை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மனைவி முத்துசெல்வி. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. சோபியா என்ற மகளும், மாரீஸ் என்ற மகனும் உள்ளனர்.
கட்டடத் தொழிலாளியான சாமிதுரைக்கு குடிபழக்கம் உண்டு. அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை துன்புறுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையிலேயே குடித்துவிட்டு வந்த சாமிதுரை மீண்டும் முத்துசெல்வியிடம் தகராறு செய்தார். பின்னர் அவர் வெளியே சென்றுவிட்டார். இந்நிலையில் மனமுடைந்த முத்துசெல்வி தனது வீட்டை பூட்டுக்கொண்டு அங்கிருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீதும், 2 குழந்தைகள் மீதும் ஊற்றிவிட்டு தீயை பற்ற வைத்தார்.
சூடு தாங்காமல் குழந்தைகள் அலறியபோதும் அவர்களை விடாமல் அணைத்துக் கொண்டார். ஆனால் மாரிஸ் மட்டும் தனது அம்மாவின் பிடியில் திமிறி தப்பித்து ஓடி கட்டிலுக்குக் கீழே பதுங்கினான்.
இந்நிலையில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தார் ஓடிவந்து கடப்பாரையால் வீட்டு கதவை உடைத்து நுழைந்தனர்.
அங்கு முத்துசெல்வி உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த சிறுமி சோபியா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு அவள் இறந்தாள். சிறுவன் மாரீஸ் லேசான காயங்களுடன் உயிர் தப்பி கொண்டான். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
--












Click it and Unblock the Notifications