பகலில் பயங்கர வெயில் - மாலையில் சூறாவளியுடன் மழை
சென்னை: சென்னையில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் வறுத்தெடுத்த நிலையில் மாலையில் திடீரென பலத்த சூறாவளிக் காற்றுடன் இடியுடன் கூடிய கன மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.
சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும் ஆங்காங்கு மழையும், காற்றும் வீசுவதால் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களுக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்து வருகிறது.
ஆரம்பத்தில் வேலூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயில் அடித்து வந்தது. தென் மாவட்டங்களில் பெரிய அளவில் வெயில் இல்லை. ஆனால் தற்போது சென்னையில்தான் அதிக பட்ச வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.
மேலும், கடந்த சில நாட்களாக திடீர் திடீரென பலத்த காற்றும் வீசி வருகிறது. நேற்றும் பகல் முழுவதும் பயங்கர வெயில் அடித்தது. கூடவே அனல் காற்றும் வீசியதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் மாலையில் நிலைமை தலைகீழாக மாறியது. சென்னை நகரின் உட்பகுதிகளான தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடியுடன் கன மழை பெய்தது. அதேசமயம், புறநகர்ப் பகுதிகளிலும் ஓரளவு மழை காணப்பட்டது.
ஆனால் மக்களை பயமுறுத்தும் வகையில் நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த சூறைக் காற்று வீசியது. மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சூறாவளிக் காற்று வீசியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் அரை மணி நேரம் வீசிய இந்த சூறாவளிக் காற்றால் நகரமே ஸ்தம்பித்தது. பலத்த வேகத்துடன் வீசிய காற்றால் புழுதி வாரி இறைக்கப்பட்டதால் சாலைகளில் சென்றவர்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகினர். பல இடங்களில் மரங்கள் பிடுங்கி எறியப்பட்டன. ஓட்டு மற்றும் குடிசை வீடுகளின் மேற்கூரைகளும் தூக்கி வீசப்பட்டன.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், போடப்பட்டிருந்த இருக்கைகள் தூக்கி வீசப்பட்டன.












Click it and Unblock the Notifications