கள்ளச்சாராய சாவுகளுக்கு தமிழக அரசே காரணம்: விஜயகாந்த்
சென்னை: தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத்திலும் ஊழல் எந்த அளவுக்கு புரையோடி உள்ளது என்பதையே கள்ளச்சாராய மரணங்கள் காட்டுகின்றன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பணக்காரர்கள், விலை உயர்ந்த வெளிநாட்டு மதுவகைகளை வாங்கிக் கொள்ள மத்திய அரசே வரிவிலக்கு அளிக்கிறது.
தமிழக அரசோ, எந்த அரசுகளும் செய்ய முன்வராத சாராயக்கடை வியாபாரத்தை நடத்துகிறது. டாஸ்மாக் என்ற பெயரில் கடந்த ஆட்சியும் சரி, இந்த ஆட்சியும் சரி, தமிழகத்தில் சாராயம் பெருக்கெடுத்து ஓட அனுமதித்து விட்டன.
ஆனால் ஏழைகளைப் பொறுத்தவரையில் இந்த டாஸ்மாக் சாராயமும் கைக்கு எட்டாத விலையில் உள்ளது. எனவே அவர்கள் மலிவாக கிடைக்கும் கள்ளச்சாராயத்தை நாடுகின்றனர். இதுவே அவலங்களுக்குக் காரணம்.
அரசு சாராயக்கடைகளை நடத்தினால் கள்ளச்சாராயம் அறவே ஒழிந்துவிடும் என முதல்வர் கருணாநிதி கூறினார். அப்படியானால் இத்தகைய மரணங்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதை அவர் விளக்கவேண்டும்.
கள்ளச்சாராய வியாபாரிகள் போலீஸ் துறையையும் நன்கு கவனிப்பதால் இத்தகைய உயிர்பலிகள் ஏற்படுகின்றன. ஆனால் முதல்வரோ போலீஸ்துறை அற்புதமாக பணிபுரிகிறது என சட்டசபையில் பெருமைப்பட்டுக் கொண்டார்.
அவர் பேசிமுடித்ததும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது, போலீஸ் துறையை மட்டுமல்ல, தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத்திலும் ஊழல் எந்த அளவுக்குப் புரையோடிப் போயிருக்கிறது என்பதையே காட்டுகிறது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கள்ளச்சாராய சாவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், தற்போது ஏற்பட்ட இந்த சாவுகளுக்குப் பிறகாவது கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.
கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட விஷச் சாராயம் 50க்கும் அதிகமான உயிர்களை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலி கொண்டுவிட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை ஒரு லாபகரமான தொழிலாக நடத்தப்படுகிறது. போலீஸ் துறையின் ஒரு பகுதியினர் இத்தகைய சக்திகளுடன் நிரந்தரக் கூட்டணி வைத்துள்ளனர் என்பதும் புலனாகிறது.
தற்போது நடந்துள்ள பெருமளவு சாவுகளுக்குப் பின்னராவது, தமிழகம் முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications