முன்கூட்டியே தொடங்கியது குற்றால சீசன்
குற்றாலம்: தென் மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றாலத்தில் சீசனும் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு மே 28ம் தேதியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதற்கான அறிகுறி இப்போதே தமிழக-கேரள எல்லையான தென்மலை, ஆரியங்காவு, செங்கோட்டை, குற்றாலம் பகுதிகளில் தென்பட தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து குற்றால சீசனும் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
இதன் அறிகுறியாக செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் லேசான சாரல் மழை, இதமான காற்றுடன் பெய்தது.
மேலும் கரு மேக கூட்டம் பரவலாக உள்ளதால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் முடிவதற்குள் குற்றால சீசன் தொடங்கி விடும் என நம்பப்படுகிறது. மேலும் விடிய, விடிய குளிர்ந்த காற்றும் வீசியது.
பழந்தோட்ட அருவியில் குளிக்க தடை
இந்த நிலையில், குற்றால சீசன் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் பிரகாஷ் பேசுகையில், குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் பருவ நிலை மாற்றம் காரணமாக சாரல் மழை பொழியும். சீசன் நேரத்தில் தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது, இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் அதிக அளவில் குற்றாலத்திற்கு வருவார்கள்.
இக்காலங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள், கழிப்பிட வசதிகள், போலீஸ் துறை மூலம் மக்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவது, மருத்துவதுறையின் முலம் சுகாதார வசதிகள் வழங்குதல் போன்றவற்றை அந்த துறையை சேர்ந்தவர்கள் மூலம் செய்து கொடுக்கப்படும்.
குற்றாலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும். குற்றால நகரியம் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதிகளை பராமரிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பழந்தோட்ட அருவியில் குளிக்க கிடையாது. அங்கு போகவும் தடை விதிக்கப்படுகிறது.
குற்றாலத்தில் ஜூலை மாதம் சாரல் திருவிழா நடத்தப்படவுள்ளது.. அதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications