பொறியியல் கல்வி- விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கும் தேதி வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில் பிளஸ் டூ மதிப்பெண் மற்றும் கவுன்சிலிங் அடிப்படையில் தான் என்ஜினியரிங் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இந்த வருடத்திற்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பம் படிவம் அண்ணா பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள்,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகள், அரசு கலைக் கல்லூரிகள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நேற்று வரை 1,31,500 விண்ணப்ப படிவங்கள் விற்கப்பட்டுள்ளன.
விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க 26ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் இது 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநில கல்வித்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பிளஸ்-2 மார்க் பட்டியல் 21ம் தேதி தான் வழங்கப்பட்டதாலும், மத்திய கல்வித் திட்டத்தில் 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் 21ம் தேதி தான் வெளியிடப்பட்டதாலும் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுவதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று என்ஜினீயரிங் கல்விக்கான விண்ணப்பங்கள் வினியோகிப்பதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிப்பதற்கான காலக்கெடு 31ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.