தமிழகத்தில் அரிசி கையிருப்பு-கருணாநிதி ஆய்வு
சென்னை: ரேஷன் அரிசியை கடத்துவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயக்கம் இன்றி நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழக அரசு நிறைவேற்றிவரும் திட்டங்கள், அவற்றின் மூலம் மக்கள் அடையும் பயன்கள் ஆகியன குறித்தும், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுதல் குறித்தும் துறைவாரியாக அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்யும் பணிகளை முதல்வர் கருணாநிதி நேற்று தொடங்கினார்.
முதலாவதாக, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் பணிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் கூட்டுறவு அமைச்சர் கோ.சி.மணி, உணவு அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர், அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி போன்ற பொருள்களின் தரம், கையிருப்பு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. அடுத்துவரும் மூன்றரை மாத தேவைகளை நிறைவு செய்யும் அளவில் தற்போதைய அரிசி கையிருப்பு போதுமானதாக உள்ளது என்றும்,
இதே நிலையை தொடர்ந்து கடைப்பிடித்து போதுமான அரிசி கையிருப்பில் வைக்கப்பட வேண்டுமென்றும், கிலோ அரிசி 2 ரூபாய் திட்டத்துக்கு தங்குதடையின்றி அரிசி வழங்கப்பட வேண்டுமென்றும் முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தினார்.
கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுபவர் யாராக இருந்தாலும், எவ்வித தயக்கமுமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அரிசி கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் பணியாளர்கள் மீதும், மேற்பார்வை செய்ய தவறிய அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் முதல்வர் உததரவிட்டார்.
சிறப்புப் பொது வினியோக திட்டத்தில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு போன்றவை தங்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்றும், தற்சமயம் 25 விழுக்காடு அட்டைதாரர்கள் இப்பொருள்களை வாங்குகின்றனர். ரவா, மைதா ஆகியவற்றை மீண்டும் சிறப்பு பொது விநியோக திட்டத்தில் வழங்க வட மாநிலங்களிலிருந்து கோதுமையை நேரடியாக கொள்முதல் செய்யவும், அதனை அரவை செய்து பொதுமக்களுக்கு வழங்கவும் அரசு ஆணையிட்டுள்ளது.
விலைவாசியை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த 19ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீதான தொடர் நடவடிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டன.
கோதுமை, பயறு வகைகள் மீது கட்டுப்பாட்டு ஆணைகள் போடப்பட்டு, பதுக்கல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எண்ணை, எண்ணை வித்துக்கள் மற்றும் அரிசி போன்ற பொருட்களுக்கு இருப்பு வைத்திருப்பதற்கான கட்டுப்பாட்டு ஆணைகள் துரிதமாக வெளியிடப்பட்டு பதுக்கல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தினார்.
மேலும், பயறு வகைகளின் விலைவாசியை கட்டுப்படுத்த மியான்மர் சென்ற அதிகாரிகள் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, உலக அளவிலான ஒப்பந்தப்புள்ளி கோரி பயறு வகைகளை இறக்குமதி செய்யவும் அரசு ஆணையிட்டுள்ளது.
மத்திய அரசு மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, அடுத்த மாதம் முதல் நியாயவிலை கடைகள் வாயிலாக வழங்கப்படவுள்ள 15,500 மெட்ரிக் டன் பாமாயிலை, மாநில அரசு தற்போது வழங்கும் லிட்டர் 40 ரூபாய் என்ற விலையிலேயே தொடர்ந்து வழங்கிட வேண்டுமென்றும் முதல்வர் கருணாநிதி அறிவுரை வழங்கினார்.
நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் போது எடை குறைவை முழுமையாக அகற்ற அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் மின்னணு தராசு நிறுவும் திட்டத்தை 31.7.2008க்குள் முடித்திட முதல்வர் உத்தரவிட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.