5வது ஆண்டில் ஐமுகூ-ஆட்சி நீடிக்க கருணாநிதி விருப்பம்
சென்னை: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நான்கு ஆண்டு கால ஆட்சிக்கு முதல்வர் கருணாநிதி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இந்த அரசு மீதமுள்ள ஒரு ஆண்டையும் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்கள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில்கள் விவரம்:
கேள்வி: ஐந்தாவது ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலெடுத்து வைத்திருப்பது பற்றி ..?
கருணாநிதி: என்னுடைய மகிழ்ச்சியையும், பாராட்டையும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், கூட்டணித் தலைவர் சோனியா காந்திக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: இந்த அரசு மேலும் ஓராண்டு காலத்திற்கு நீடிக்குமா?
கருணாநிதி: இருக்கும், இருக்க வேண்டும். இருக்கும் என்பது எதிர்பார்ப்பு, இருக்க வேண்டும் என்பது விருப்பம்.
கேள்வி: மத்திய அரசு வெளியிட்டுள்ள சாதனைப் பட்டியல் பற்றி?
கருணாநிதி: மத்திய அரசு அண்மையில் ரூ. 60 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. துறைமுகங்கள் வளர்ச்சிக்கும், புதிய துறைமுகங்களை உருவாக்குவதற்கும் நிறைய நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். ஓரகடத்தில் தேசிய வாகன சோதனை மையம், பிரமாண்டமான சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நீண்ட நெடிய சாலைகள் அமைவதற்கு பெருமுயற்சியெடுத்து நிறைவேற்றி வருகிறார்கள். ரயில்வே திட்டங்கள் நாம் விரும்பியவண்ணம் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் இரும்பாலை போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய ரீதியில் பார்த்தால், 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கும் வழி வகுத்துத் தந்துள்ளனர். தமிழுக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டது மாத்திரமல்ல, செம்மொழி நிறுவனத்தை சென்னையில் அமைப்பதற்கு வழி கண்டிருக்கிறார்கள்.
தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்ற கேள்விக்கு, நன்றாகவே உள்ளன என்றார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications