கள்ளக்காதலை அறிந்த மகள்-வேலைக்காரரை கொன்ற டாக்டர்
உ.பி. மாநிலம் நொய்டாவில் பல் டாக்டராக இருப்பவர் ராஜேஷ் தல்வார். இவரது மனைவி நூபுர். இவர்களது 14 வயது மகள் அருஷி. 9ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த வாரம் அருஷி, தனது இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. அவரது வீட்டு வேலைக்கார இளைஞர் ஹேம்ராஜும் இதேபோல கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.
ஹேம்ராஜின் உடல் அடுத்த நாள் டாக்டர் தல்வார் வீட்டு மாடியில் கிடந்தது.
இதையடுத்து இந்த இரட்டைக் கொலைகளைச் செய்தது யார் என்பதை அறிய போலீஸார் விசாரணையில் இறங்கினர். அவர்களுக்கு டாக்டர் தல்வார் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து ராஜேஷ், அவரது மனைவி நூபுர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் இருவரையும் கொன்றவர் தல்வார்தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை நேற்று இரவு போலீஸார் கைது செய்தனர்.
மகளைக் கொன்றது ஏன்?:
பெற்ற மகளையும், வேலைக்காரரையும் டாக்டர் ராஜேஷ் தல்வார் கொன்றதன் பின்னணி மிகவும் பரபரப்பானது. தல்வாருக்கும், அவருடன் பணியாற்றும் டாக்டர் அனிதா என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இருவரும், வீட்டில் யாரும் இல்லாத போது உல்லாசம் அனுபவித்துள்ளனர். இது வேலைக்காரர் ஹேம்ராஜுக்குத் தெரிய வந்தது. இதை அவர் அருஷியிடம் தெரிவித்தார். தந்தையின் செயல் குறித்து அறிந்த அருஷி அதிர்ச்சி அடைந்தார். தந்தையிடம் சண்டை பிடித்தார்.
இதனால் ஹேம்ராஜ் மீது டாக்டர் தல்வார் கோபமடைந்தார். ஹேம்ராஜைக் கண்டித்துள்ளார். ஆனால் ஹேம்ராஜ், தல்வார் - அனிதாவின் கள்ளத் தொடர்புகள், சந்திப்புகள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது அருஷியிடம் தெரிவித்து வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்தார் தல்வார். இந்த நிலையில் கொலை நடப்பதற்கு முதல் நாள் இரவில் (மே 15) வீட்டுக்கு வந்த தல்வாரிடம், அவரது மகள் அருஷி, கள்ளக் காதலை விட்டு விடுமாறு கூறி வாக்குவாதம் செய்துள்ளார். ஹேம்ராஜும், டாக்டரிடம் இதுகுறித்து பேசியுள்ளார்.
இதனால் எரிச்சலடைந்த டாக்டர் தல்வார், இருவரையும் கொல்லத் திட்டமிட்டார். அதன்படி முதலில் ஹேம்ராஜை மாடிக்கு அழைத்துச் சென்று கழுத்து நரம்பை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் மகளையும் இவ்வாறு கொடூரமாக கொன்றுள்ளார்.
டாக்டரைக் கைது செய்துள்ள போலீஸார், சம்பவம் குறித்து அறிந்திருந்த நூபுர் மீதும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர்.