பெங்களூர் புதிய விமான நிலையம்-சேவை ஆரம்பம்
பெங்களூரில் இத்தனை காலமாக பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான எச்.ஏ.எல் விமான நிலையம் தான் பயணிகள் விமான நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், விமானங்கள்-பயணிகள் எண்ணிக்கை பல மடங்காகிவிட்ட நிலையில் இந்த சிறிய விமான நிலையம் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. இதையடுத்து பெங்களூர் நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள தேவனஹள்ளியில் புதிய பிரமாண்டமான விமான நிலையம் கட்டப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் சர்வதேச விமான நிலையம், சீமென்ஸ் நிறுவனம், எல் அண்ட் டி ஆகியவை இணைந்து ரூ. 2,470 கோடி செலவில் இந்த விமான நிலையத்தை கட்டின. இதற்கான 4,000 ஏக்கர் நிலத்தை கர்நாடக அரசு வழங்கியது.
ஆனால், இவ்வளவு பெரிய விமான நிலையத்தைக் கட்டினாலும் நகரில் இருந்து இந்த விமான நிலையத்தை அடைவதற்கு உரிய சாலை வசதிகளை கர்நாடக அரசு அமைக்கவில்லை. இந்த விமான நிலையத்துக்கு செல்வதற்கு என தனி ரயில் பாதை அமைக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
இதற்கிடையே பெரும் அளவில் முதலீடு செய்து விமான நிலையத்தை கட்டிய நிறுவனங்கள் உடனே அதன் செயல்பாட்டை துவங்க வேண்டு்ம் என மத்திய அரசை நிர்பந்தித்தன.
ஆனால், உள்நாட்டில் பிற நகர்களுக்கு 45 நிமிட விமான பயணம் செய்ய வேண்டியவர்கள், இந்த விமான நிலையத்தை அடையவே 2 மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை இருப்பதால் முதலில் சாலை வசதிகளை மேம்படுத்திவிட்டுத் தான் புதிய விமான நிலையத்தை துவக்க வேண்டும் என வழக்குகள் போடப்பட்டன.
இதையடுத்து சாலைகளை சீர் செய்ய ஆரம்பித்தது கர்நாடக அரசு. அந்தப் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று நள்ளிரவு விமான நிலையம் தனது செயல்பாட்டை ஆரம்பித்துவிட்டது.
இதற்கிடையே பழைய விமான நிலையத்தை உள் நாட்டு விமான சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய விமானத்துறை இன்னும் திட்டவட்டமான முடிவு எடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கும் பெங்களூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் இந்த விமான நிலையத்துக்கு கெம்ப கெளடாவின் பெயர் வைக்க வேண்டும் என்று நேற்று காலை முதல் போராட்டங்கள், பஸ் மறியல்களும் நடந்து வருகின்றன.
இத்தனை சிக்கல்களுக்கு இடையே நேற்று நள்ளிரவு 11.37 மணிக்கு தனது ஆபரேசனை துவக்கியது. ஏர் இந்தியா விமானம் முதல் விமானமாக இங்கு தரையிறங்கியது. 12.15 மணிக்கு இந்த விமானம், முதல் விமானமாக டேக் ஆப் செய்து சிங்கப்பூர் கிளம்பிச் சென்றது.
ஆனால், இந்த விமான நிலையம் மூலமாக பயணிக்க வருவோர் விமான நிலைய சேவைக் கட்டணமாக ரூ. 1,000 கட்ட வேண்டும். இது டிக்கெட் கட்டணத்தில் சேராது. இதைத் தனியாக கட்டணமாக செலுத்த வேண்டும். இதை அறியாத பலர், நேற்று இரவில் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
குறைந்த கட்டண விமான சேவைகளை பயன்படுத்துவோர் டிக்கெட் கட்டணமே சில ஆயிரங்கள் தான் செலுத்தியிருப்பர். இந் நிலையில் டிக்கெட் கட்டணத்துக்கு இணையாக இன்னொரு கட்டணமாக இந்தப் பணத்தை செலுத்தியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர்-சென்னை விமான பயண நேரம் 35 நிமிடங்கள் தான். ஆனால் ஒரு மணி நேரம் முன்னதாக விமான நிலையத்தில் செக்-இன் செய்ய வேண்டும் என்ற நிலையில், பெங்களூர் டிராபிக்- சாலைகளை மனதில் கொண்டு 3 மணி நேரம் முன்னதாகவே வீட்டை விட்டுக் கிளம்பினால் தான் விமானத்தை பிடிக்க முடியும்.
ஆக, சென்னை செல்ல கிட்டத்தட்ட 3.30 மணி நேரம் பிடிக்கும். ஆனால், வெறும் ரூ. 600 செலவில் சதாப்தி ரயிலில் சென்னை செல்ல 5 மணி நேரம் தான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications