அரசு மருத்துவமனையில் கட்டாய பணி-எதிர்த்து வழக்கு
சென்னை: மருத்துவ மேல் படிப்பு முடித்த டாக்டர்கள் 3 ஆண்டுகளுக்கு கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டாக்டர் கே.கே.ரவிசங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், 2007ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. அதில், மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்கள் கட்டாயம் 3 ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
நான் 2006ம் ஆண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் நலம் குறித்த மேல் படிப்பில் (எம்.டி) சேர்ந்தேன். அப்போது, மேல் படிப்பை முடித்த பின்னர் அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவாதக் கடிதம் தருமாறு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன் என்னிடம் கோரினார்.
அதுதொடர்பான உத்தரவில், மாணவர்களின் கையெழுத்து தவிர, 2 உத்தரவாத கையெழுத்தும் கோரப்பட்டது. மேலும் நாங்கள் உறுதியளித்தபடி பணியாற்ற மறுத்தால் அரசுக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அப்போது எங்களுக்கு வேறு வழியில்லாததால், நான் உள்பட அனைத்து மாணவர்களும் அந்த உத்தரவாதக் கடிதத்தில் கையெழுத்திட நேர்ந்தது.
2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது படிப்பு முடிந்ததும், டெல்லி பல்கலைக்கழகத்தில் இதயவியலில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள நான் தீர்மானித்தேன். இதற்காக எனது அசல் சான்றிதழ்களைத் தர வேண்டும் என கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பித்ேதன். ஆனால் சான்றிதழ்களைத் தர மருத்துவக் கல்லூரி மறுத்து விட்டது.
எனது எம்.டி (குழந்தைகள் நலம்) உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களையும் என்னிடம் வழங்குமாறு கல்லூரிக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்யநாராயணன், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணை மே 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications