ஜூலை 4 முதல் எம்பிபிஎஸ்; 11 முதல் பிஇ கவுன்சிலிங்
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூலை 11ம் தேதி துவங்குகிறது. அதே போல மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் ஜூலை 4ம் தேதி தொடங்குகிறது.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் முன்னதாகவே வெளியிடப்பட்டன. எனவே மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கையும் முன்னதாகவே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த 10ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை தாக்கல் செய்வற்கான தேதி மாணவர் நலன் கருதி வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்களுக்கான 'ரேண்டம் எண்' ஜூன் 20ம் தேதி அளிக்கப்படும். தர வரிசைப் பட்டியல் ஜூன் 25ம் தேதி வெளியிடப்படும்.
என்ஜினீயரிங் பட்டப் படிப்பில் சேரும் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 3ம் தேதி நடைபெறும். தொழில் கல்வி பாடத்திட்ட மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும்.
வெளிமாநில மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 9ம் தேதியும், உடல் ஊனமுற்றோருக்கான கவுன்சிலிங் 10ம் தேதி நடைபெறும்.
பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூலை 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடைபெறும்.
1.30 லட்சம் இடங்கள்:
இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் 1.30 லட்சம் இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் அரசுக்கு 65 சதவீத இடங்களும், கல்லூரி நிர்வாகங்களுக்கு 35 சதவீத இடங்களும் ஒதுக்குவது என்றும், சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுடன் பகிர்ந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு புதிதாக 100 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளை தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். எனவே கூடுதலாக கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
கட்டணம் எவ்வளவு?:
என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான கட்டணம் எவ்வளவு என்பதை அதற்காக அமைக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் குழு அடுத்த வாரம் தாக்கல் செய்யும்.
மருத்துவ படிப்பு கவுன்சிலிங்:
மருத்துவப் படிப்புக்கு இந்த ஆண்டு 1,645 இடங்கள் உள்ளன. இதில் 245 இடங்கள் மத்திய அரசு ஒதுக்கீடாகவும், 1,398 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடாகவும் இருக்கும். 3 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 251 இடங்கள் ஆகும்.
மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் ஜூன் 3ம் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 17ம் தேதி.
'ரேண்டம் எண்' ஜூன் 18ம் தேதி வெளியிடப்படும். தரவரிசை பட்டியல் 28ம் தேதி வெளியிடப்படும்.
மருத்துவ பட்டப் படிப்புக்கான முதல் கட்ட கவுன்சிலிங் ஜூலை 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறும். மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கடைசி நாள் ஜூலை 21ம் தேதியாகும். ஆகஸ்டு 4ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.
2வது கட்ட மருத்துவ கவுன்சிலிங் ஆகஸ்டு 28ம் தேதி நடைபெறும். தேர்வு பெற்ற மாணவர்கள் ஆகஸ்டு 30ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். செப்டம்பர் 30ம் தேதியுடன் அனைத்து மருத்துவ சேர்க்கையும் முடிவடையும்.
அண்ணா பல்கலையில் கவுன்சிலிங்:
என்ஜினீயரிங், மருத்துவ படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்கள் வழங்கப்படும். என்ஜினீயரிங் கவுன்சிலிங் சென்ற ஆண்டை போல அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும்.
கவுன்சிலுக்கு வர பஸ் கட்டண சலுகை:
இதற்கு கடந்த ஆண்டை போல மாணவருக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் பஸ் கட்டண சலுகை வழங்கப்படும்.
இதே போல மருத்துவ கவுன்சிலிங்குக்கு வரும் மாணவர்களுக்கும் பஸ் கட்டண சலுகை வழங்கப்படும் என்றனர் அமைச்சர்கள்.












Click it and Unblock the Notifications