கோவில் விழாவில் பெண்களிடம் கேலி-அடிதடி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கந்தர்வகோட்டையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் அடிதடி ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது கல் வீச்சு தாக்குதல் நடந்தது.
கந்தர்வகோட்டை நெப்புசை கிராமத்தில் குளப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 8 நாட்களாக திருவிழா நடந்து வந்தது.
கோவில் திருவிழா நிறைவு நாளன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கோவிலுக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். அந்தப் பெண்களை சில இளைஞர்கள் கேலி செய்துள்ளனர்.
மேலும் சில இளைஞர்கள் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டாதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் அடிதடியில் இறங்கினர்.
இதையடுத்து தவறு செய்த இளைஞர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் போலீசார் மீது சரமாரியாக கல் வீசி தாக்கியது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய பிரகாஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.