நெல்லை மருத்துவமனையில் பெண் மர்ம சாவு
நெல்லை: நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் தூங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
நெல்லை டவுண் ஜெயபிரகாஷ் தெருவை சேர்ந்தவர் கோமதிநாயகம்.. நெல்லையில் உள்ள டாஸ்மக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தங்கலெட்சுமி. திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் ஆண்குழந்தை உள்ளது.
இந்நிலையில் தங்கலெட்சுமி மீண்டும் கர்ப்பமானார். பிரசவத்திற்காக அவரை டவுனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மூன்று நாட்களுக்கு முன் தங்கலெட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு தங்கலெட்சுமி தனக்கு துக்கம் வரவில்லை என டாக்டர்களிடம் கூறினார். இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தூங்குவதற்கான ஊசி போட்டனர். அதன்பிறகு தங்கலெட்சுமி தூங்கிவிட்டார். அருகில் அவரது குழந்தையும் தூங்கி கொண்டிருந்தது.
நேற்று காலை தங்கலெட்சுமி உடலில் அசைவு இல்லாமல் இருப்பதை பார்த்த உறவினர்கள் டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர். டாக்டர்கள் வந்து தங்கலெட்சுமி உடலை பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது. மேலும் அவரது உடல் விறகுகட்டை போல் இறுகி காணப்பட்டதால் தங்கலெட்சுமி இறந்து பலமணி நேரம் ஆகியிருப்பது தெரிய வந்தது.
அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் தவறான ஊசி போட்டதால்தான் தங்கலெட்சுமி இறந்துவிட்டதாக கூறி டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையின் முன் கூடி முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications