தென்னகத்தில் முதல் முறையாக ஆட்சியை பிடித்த பாஜக!

மொத்தமுள்ள 224 இடங்களில் பாஜகவுக்கு 110 இடங்களும், காங்கிரசுக்கு 80 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 28 இடங்களும் பிற கட்சிகளுக்கு 6 இடங்களும் கிடைத்துள்ளன.
ஆட்சியமைக்க 113 இடங்களே தேவை என்ற நிலையில் சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. தேவைப்பட்டால் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் சிலருக்கும் பாஜக வலை வீசலாம் எனத் தெரிகிறது.
கடந்த தேர்தலில்..
கலைக்கப்பட்ட சட்டசபையில் பாஜகவுக்கு 79 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 65 எம்எல்ஏக்களும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 58 எம்எல்ஏக்களும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 5 எம்எல்ஏக்களும் இருந்தனர் என்பது நினைவுகூறத்தக்கது.
இதன் மூலம் மதசார்பற்ற ஜனதா தளத்துக்குத் தான் பெருத்த அடி விழுந்துள்ளது. அந்தக் கட்சி இழந்த இடங்களை பாஜக அள்ளியுள்ளது.
காங்கிரஸ் கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வென்றாலும், பாஜகவின் வெற்றியுடன் ஒப்பிடுகையில் அது பெரிய வெற்றி இல்லை.
கர்நாடக சட்டசபைக்கு மே 10, 16, 22 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. 2,242 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 108 பேர் பெண்கள்.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. 46 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரம் பாஜகவும், காங்கிரஸும் மாறி மாறி முன்னணியில் இருந்தன. ஆனால், வட மாவட்டங்களில் பாஜகவுக்கு முழுமையான வெற்றி கிடைக்க ஆரம்பித்ததையடுத்து காங்கிரஸை அக் கட்சி பின்னுக்குத் தள்ளியது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பெங்களூர் நகரின் பெரும்பாலான தொகுதிகளிலும் பாஜகவே வென்றுள்ளது.
முன்னாள் முதல்வர் குமாரசாமி, அவரது தம்பி எச்.டி.ரேவண்ணா உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். நடிகர் அம்பரீஷ், மாநில மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் மிராஜூதீன் பாட்டீல் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
இத்தேர்தலில் 224 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எடியூரப்பா, முன்னாள் முதல்வர் பங்காரப்பாவை எதிர்த்து ஷிகாரிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் பங்காரப்பாவை வென்றார்.
தேர்தலில் காங்கிரஸ் 222 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் 219 பேரும் களத்தில் இருந்தனர். பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தலில் இறங்கியது. இக்கட்சியின் சார்பில் 217 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
மறு சீரமைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் கர்நாடகத்தில் தேர்தல் நடந்துள்ளது. இந்தியாவிலேயே தொகுதி மறு சீரமைப்பின் அடிப்படையில் தேர்தல் நடந்த முதல் மாநிலம் கர்நாடகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications