மதச்சார்பற்ற ஜனதாளத்துடன் காங். கூட்டணி வைக்கலாம் - மொய்லி
பெங்களூர்: மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் காங்கிரஸ் கட்சி இணைந்து செயல்பட முடியும். இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. 2வது இடத்தில் காங்கிரஸும், 3வது இடத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளமும் உள்ன.
இந்த நிலையில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற பேச்சு சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க முயலலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வீரப்ப மொய்லி கூறுகையில், இரு கட்சிகளும் ஒத்த கருத்துடையவை. மதச்சார்பற்ற சக்திகளான இவை இரண்டும் இணைந்து செயல்படுவதில் தவறில்லை. சிக்கலும் இல்லை.
காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி குறித்து பரிசீலிக்க முடியும் என்றார் மொய்லி.
கூட்டணி கிடையாது - குமாரசாமி:
அதேநேரத்தில் 3வது இடத்தைப் பிடித்துள்ள மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, பாஜகவுடனோ அல்லது காங்கிரஸுடனோ கூட்டணி கிடையாது என்று கூறியுள்ளார்.
எங்களது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றார் குமாரசாமி. இருப்பினும் மதச்சார்பற்ற ஜனதாதளம் நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை முடிவுகளை மாற்றும் என்பது கடந்த கால அனுபவம் என்பதால் கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தேவெ கெளடா ஆதரவு தரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாங்கள் யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.