தங்கக்காசு மோசடி: கோல்ட் குவெஸ்ட் எம்.டி. புஷ்பத்திற்கு குண்டாஸ்

சென்னையை சமீபத்தில் கலக்கிய மிகப் பெரிய மோசடி தங்கக் காசு மோசடி. பல தமிழ், தெலுங்குப் பட நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரின் பெயர்களும் இதில் அடிபட்டன.
இந்த மோசடி தொடர்பாக கோல்ட் குவெஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான புஷ்பம், உதவி இயக்குநர் அகஸ்டின் ஜோசப், இயக்குநர் தண்டபாணி, அக்கவுன்ட்ஸ் மேனேஜர் சுமேஷ், வாடிக்கையாளர் பிரிவு மேலாளர் ஹரி பிரபாகர், பங்குகள் மேலாளர் வித்யா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புஷ்பத்தை மட்டும் தற்போது போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதனால் அவர் ஒரு ஆண்டுக்கு சிறையிலிருந்து வெளியே வர முடியாது.
இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில்குமரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோல்ட் குவெஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான புஷ்பம் நாயுடு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் தலைவரான விஜய் ஈஸ்வரன் ஹாங்காங்க்கிற்கோ, மலேசியாவுக்கோ தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவரையும் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் ஒரு பன்னாட்டு வங்கியில் ரூ. 50 கோடி முதலீடு செய்துள்ளது. மேலும், பங்குச் சந்தையில் ரூ. 150 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி இந்த தொகையை முடக்கி வைக்க செபியிடம் அனுமதி கோரியுள்ளோம்.
இதுதவிர ஹைதராபாத் மற்றும் மும்பையில் உள்ள இரு நிதி நிறுவனங்களிலும் இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது. அவற்றையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களுக்கும் அவர்களது பணத்தைத் திரும்பப் பெற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனம் மீது இதுவரை மொத்தம் 17 ஆயிரத்து 500 புகார்கள் வந்துள்ளன.
மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் முறை மூலம் இந்த நிறுவனம் ரூ. 45 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளது என்றார் நாஞ்சில் குமரன்.












Click it and Unblock the Notifications