குற்றாலத்தில் 'குளுகுளு' சீசன்
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் துவங்கும். கடந்த ஆண்டு கோடையில் நல்ல மழை பெய்ததால் மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கி விட்டது. அதேபோல் இந்த ஆண்டும் முன்கூட்டியே சீசன் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது.
கேரளாவில் இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே துவங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை தெரிவித்துள்ளது. கேரளாவில் பருவ மழை தீவிரமாக இருக்கும்போதுதான் குற்றாலத்தில் சாரல் மழை தொடரும். எனவே குற்றாலத்திலும் குளுகுளு சீசன் முன்னரே துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலையில் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியதால் பருவ நிலையில் லேசான மாற்றம் காணப்பட்டது.
மேலும் நெல்லை, ராஜபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு லேசான சாரல் மழை பெய்தது. குற்றாலத்தில் சீசன் தொடங்குவதற்கான அறிகுறியாக இது கருதப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரிரு நாட்களில் சாரல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சுற்றுலா ஆர்வலர்கள் கருதுகின்றனர்.