திருவிழாவுக்கு தடை-முதல்வருக்கு பிரசாதம் அனுப்பி போராட்டம்
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே உள்ள பாவூர் சத்திரத்தில் கோவில் திருவிழாவுக்கு தடை வித்த போலீசாரை கண்டித்து தமிழக முதல்வருக்கு பொது மக்கள் பிரசாதம் அனுப்பி தங்களது எதிர்ப்பை நூதன முறையில் வெளிக்காட்டினர்.
திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். இது 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ் பெற்ற கோவிலாகும்.
இந்த கோவிலில் கடந்த சில தினங்களாக வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விழாவுக்கு அனுமதி பெறவில்லை என்று கூறி திடீரென போலீஸார் திருவிழாவுக்குத் தடை விதித்தனர். இதனால் கடைசி நாள் விழாவை நடத்த முடியாமல் போனது.
போலீஸாரின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், விழா நடத்தா விட்டால் சாமி குத்தம் ஆகி விடும் என முடிவு செய்து சுப்பிரமணியசுவாமிக்கு நேற்று பொங்கல் விழா வைத்து வழிபட்டனர்.
மேலும், போலீசாரின் செயலை கண்டிக்கும் விதமாகவும், சாமி குத்தம் வராமல் இருக்கவும் தமிழக முதல்வர், தமிழக டிஜிபி, நெல்லை மண்டல டிஐஜிக்கு தபாலில் அந்த பொங்கலை பிரசாதமாக அனுப்பி வைத்தனர்.