மத்திய அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன-வைகோ
புதுக்கோட்டையில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ பேசியதாவது:
நமது அரசியல் பயணத்தில் குருஷேத்திர யுத்தத்தை சந்திக்க போகிறோம். அதற்கான ஆயத்த பணிகளில் நாம் ஈடுபட்டு வருகிறோம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவற்றை அலசி ஆராய்கிறவர்கள் மதிமுகவில் உள்ளனர். இந்த கப்பல் மூழ்குகிற கப்பல் அல்ல. நீர் மூழ்கி கப்பலாக மூழ்கி எதிரிகளை துவசம் செய்வோம்.
தமிழர்களின் நலனுக்காக மதிமுக போராடி வருகிறது. இந்த இயக்கத்தை கடந்த 16 வருடங்களாக அழித்து விட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி துடித்தார். ஆனால் அவரால் முடியவில்லை. இதனால் (கட்சியைவிட்டு வெளியேறிய) துரோகிகளை வைத்து வீழ்த்த நினைத்தார். அதுவும் முடியாமல் போனது.
காங்கிரஸ், பாமக, வலது கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், இப்படி ஒவ்வொரு கட்சியையும் உடைத்து சகுனி வேலை பார்ப்பதுதான் கருணாநிதியின் வேலை.
அணுசக்தி ஒப்பந்தத்தை கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இனி யாராலும் காப்பாற்ற முடியாத நிலைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வியின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ளது. யூகோஸ்லாவியா நாட்டில் இருந்து கொசாவோ விடுதலை பெற்றது போல இலங்கையில் இருந்து ஈழம் விடுதலை பெறும்.
விலைவாசி உயர்வு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். தற்போது மத்திய அரசின் செல்வாக்கு சரியத் தொடங்கிவிட்டது. அதன் நாட்கள் எண்ணப்படுகின்றன. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழக மக்கள் உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர்.
மதிமுக சார்பில் வரும் 18 ம் தேதி சென்னையில் நடக்கும் மாநாடு தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும். திமுகவோடு கூட்டணி வைத்ததால் மதிமுகவுக்கு சறுக்கல்தான் ஏற்பட்டது. வருகிற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். அதிமுக-மதிமுக உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது என்றார் வைகோ.