குஜ்ஜார்கள் முற்றுகை-டெல்லி ஸ்தம்பிப்பு
டெல்லி: ராஜஸ்தானில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குஜ்ஜார் சமூகத்தினர் இன்று டெல்லியை முற்றுகையிட்டனர். ரயில் மற்றும் பஸ் மறியலில் அவர்கள் ஈடுபட்டதால் டெல்லியில் பதட்டம் நிலவுகிறது.
பழங்குடியினர் பட்டியலில் தங்களை சேர்க்க வேண்டும். தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி குஜ்ஜார் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராஜஸ்தான் போராட்ட களமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் ராஜஸ்தானிலிருந்து தற்போது போராட்டத்தை டெல்லிக்கும் கொண்டு வந்துள்ளனர் குஜ்ஜார் சமூகத்தினர். டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதை ஏற்று ஆயிரக்கணக்கான குஜ்ஜார்கள் டெல்லியில் குவிந்துள்ளனர்.
குஜ்ஜார் போராட்டத்ைதத் தொடர்ந்து டெல்லியின் நுழைவாயில் பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ரயில் தண்டவாளத்தை குஜ்ஜார்கள் துண்டிக்கத் திட்டமிட்டிருந்ததால் 10க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
கிழக்கு டெல்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியில் குஜ்ஜார்கள் பெரும் திரளாக மறியல் போராட்டத்தில் குதித்தனர். நொய்டா சாலை, குர்கான் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் சாலை மறியல் நடந்தது.
தெற்கு டெல்லியில் கல்வீச்சிலும் அவர்கள் இறங்கியதால் பதட்டம் அதிகரித்தது. குஜ்ஜார்கள் போராட்டம் காரணமாக நகரின் பல பகுதிகளிலும் பதட்டம் காணப்படுகிறது.
டெல்லிக்கு அருகில் உள்ள உ.பி., ஹரியாணா ஆகிய மாநிலங்களில் குஜ்ஜார் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். எனவே அங்கு போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லிக்குள் நுழையும் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளையும் குஜ்ஜார்கள் முற்றுகையிட்டுள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல டெல்லியை விட்டு வாகனங்கள் வெளியே வர முடியாத நிலையும் உருவாகியுள்ளது.
ஹெலிகாப்டரில் நோட்டீஸ்:
இதற்கிடையே போராட்டத்தை கைவிட கோரி ராஜஸ்தான் அரசு நூதன பிரசாரம் செய்து வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் பேராட்டத்தை கைவிட கோரி சிவப்பு நிற நோட்டீஸ்களை வனியோகித்து வருகிறது.
ஆனால் குஜ்ஜார் இன மக்கள் அந்த நோட்டீஸ்களை கைபற்றி தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.