கர்நாடக பாஜகவில் பூசல்-பஸ்களை எரித்த தொண்டர்கள்
பெங்களூர்: கர்நாடகத்தின் மூத்த பாஜக தலைவரும் எதியூரப்பா எதிர்ப்பாளருமான ஜெகதீஷ் ஷெட்டாரை அமைச்சராக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
கர்நாடகத்தின் 25வது முதல்வராக எதியூரப்பா நேற்று பதவி ஏற்றார். அவருடன் 29 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதில் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள 5 சுயேட்சைகளும் அடக்கம்.
ஆனால், எதியூரப்பாவின் அமைச்சரவையில் நிச்சயமாக இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கர்நாடக பாஜக தலைவர் ஜெகதீஷ் ஷெட்டாருக்கு இடம் தரப்படவில்லை.
இவர் தீவிரமான எதியூரப்பா எதி்ர்ப்பாளராவார். இதனால் அவரை சபாநாயகராக்கி டம்மியாக்க எதியூரப்பா திட்டமிட்டார்.
ஆனால், அரசியல் அஸ்தமானத்தில் இருப்பவர்கள் தான் சபாநாயகராக பதவியேற்பார்கள், நான் அப்படியல்ல என்று கூறிவிட்ட ஷெட்டார் தனக்கு அமைச்சர் பதவி தான் வேண்டும் என்று கூறிவிட்டார்.
ஷெட்டார் அமைச்சரவார் என நமபி அவரது சொந்த மாவட்டமான ஹூப்ளியில் இருந்து ஏராளமான பாஜக தொண்டர்கள் நேற்று பெங்களூர் வந்து குவிந்தனர். ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி தரப்படாததால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் ஹூப்ளியில் போராட்டம் வெடித்தது. ஷெட்டாரின் ஆதரவாளர்கள் 5 அரசு பஸ்களுக்கு தீ வைத்தனர். போக்குவரத்தையும் ஸ்தம்பிக்க வைத்தனர்.
மேலும் ஹூப்ளி நகராட்சியின் 28 பாஜக கவுன்சிலர்களும் ஷெட்டாருக்கு அமைச்சர் தராவிட்டால் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டி வருகின்றனர்.
இதையடுத்து ஷெட்டாரை அமைச்சராக்குமாறு பாஜக தலைமை எதியூரப்பாவை வலியுறுத்தி வருகிறது. இதனால் விரைவில் ஷெட்டார் அமைச்சராவார் எனத் தெரிகிறது.
அதே போல ஆனேகல்லில் பாஜக எம்.எல்.ஏ. நாராயணசாமியின் ஆதரவாளர்கள் அவரை அமைச்சராக்கக் கோரி 5 பஸ்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மைசூரிலும் சங்கரலிங்க கவுடா, எஸ்.ஏ.ராமதாஸ் ஆகிய எம்எல்ஏக்களின் ஆதரவாளர்களும் அவர்களை அமைச்சர்களாக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications