மறுவரையறை-எம்எல்ஏ தொகுதிகளில் மீண்டும் மாற்றம்
சென்னை: தொகுதி மறு சீரமைப்பின்படி திருத்தப்பட்ட நான்கு தொகுதிகளில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
தமிழக நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகள், எல்லை மறுவரையறை திருத்தச் சட்டத்தின் (2003)-ன் படி மாற்றி அமைக்கப்பட்டன. சில தொகுதிகள் நீக்கப்பட்டு, சில தொகுதிகள் சேர்க்கப்பட்டன.
தொகுதி எல்லைகளை மாற்றி அமைக்கும் போது சில வருவாய் கிராமங்கள், ஏற்கனவே இருந்த தொகுதியில் இருந்து நீக்கப்பட்டு, அருகில் உள்ள தொகுதிகளில் சேர்க்கப்பட்டன. தொகுதிகளை எல்லை மறுவரையறை செய்து, இறுதி அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியிட்டது.
தர்மபுரி மாவட்டம் அரூர் (தனி) தொகுதியில் இருந்த மாங்கடை வருவாய் கிராமம் மறுவரையறைக்குப் பிறகு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியுடன் இணைக்கப்பட்டது. அதுபோல் கன்னியாகுமரி மாவட்டம் கொளச்சல் தொகுதியில் இருந்த வெள்ளிமலை பேரூராட்சி, அங்கிருந்து நீக்கப்பட்டு பத்மநாபபுரம் தொகுதியில் சேர்க்கப்பட்டது. இதற்கு ஆட்சேபனைகள் கிளம்பின.
மேலும், தர்மபுரி, கன்னியாகுமரி, வேலூர், சேலம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் பரப்பளவில் செய்யப்பட வேண்டிய மாறுதல் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இவற்றின் அடிப்படையில் சில மறுவரையறையில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
அதன்படி, எல்லப்பரப்பில் மாற்றம் செய்யப்படாமல் மாங்கடை மீண்டும் அரூர் தொகுதிக்குள் சேர்க்கப்படுகிறது. அதுபோல் வெள்ளிமலை பேரூராட்சியும் மீண்டும் கொளச்சல் தொகுதியுடன் இணைக்கப்படுகிறது.
வாணியம்பாடி தொகுதியில் தற்போது இருக்கும் வெங்கடராஜசமுத்திரம் கனகப்பட்டு ஆகியவை முறையே வெங்கடராஜபுரம் மற்றும் கவுக்கப்பட்டு என்று மாற்றப்படுகிறது. வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட வட்டமுத்தம்பட்டி, வேடுகாத்தம்பட்டி என்று மாற்றம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications