பங்குகளில் பெட்ரோல் பதுக்கல்-மக்கள் அவதி
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக இழுபறி நிலவி வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், விலைவாசி கடுமையாக உயரும் என்பதால் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதனால் விலையை உயர்த்துவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் மத்திய அரசு உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் ஸ்டாக் இல்லை என்று கூறப்படுகிறதாம். ஆனால் பங்குகளில் சிலரே, பெட்ரோல், டீசலை பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வேண்டும் என்றே செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்கள் என்பதும் பொதுமக்களின் குற்றச்சாட்டு.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல ஊர்களில் இதுபோன்ற நிலை நிலவுகிறது. இதுகுறித்து பெட்ரோல் பங்குகளில் கேட்டால் எங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் பெட்ரோல், டீசலின் அளவை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து விட்டன. இதனால் போதிய அளவுக்கு சப்ளை இல்லை. எனவேதான் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.
இருப்பினும் கள்ளச் சந்தையில் அதிக விலை வைத்து பல இடங்களில் பெட்ரோல், டீசல் விற்கப்படுகிறது. இதற்கு சில பெட்ரோல் பங்குகளே உடந்தை என்கிறார்கள் பொதுமக்கள்.
பல ஊர்களில் பெட்ரோல் போதிய அளவுக்கு கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக அரசு உறுதியான முடிவை எடுக்க வேண்டும், எந்த முடிவாக இருந்தாலும் சட்டென்று எடுத்து அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கிறார்கள் பொதுமக்கள்.