For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விலைவாசியை குறைக்க என்ன தான் செய்வது?-ப.சி

By Staff
Google Oneindia Tamil News

புதுச்சேரி: விலைவாசியைக் குறைக்க இன்னும் என்ன தான் செய்வது. யாராவது நல்ல யோசனை சொன்னால் அதை ஏற்க நான் தயார் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

புதுச்சேரியில் பாரதியார் கிராம வங்கியைத் திறந்து வைத்து சிதம்பரம் பேசியதாவது

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அமர்ந்த பி்ன் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு வந்த முதலாண்டில் 7.5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி இப்போது 9.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதைத் தான் பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை.

ஆனாலும் பண வீக்க விகிதம் 8.1 சதவீதமாக உயர்ந்துள்ளது கவலை தருவதாக உள்ளது. விலைவாசி உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது தான் மிக முக்கியக் காரணம். பல்வேறு பொருள்களின் உற்பத்திக்கு கச்சா எண்ணெய் தான் மூலப் பொருளாக உள்ளது.

பாஜக ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 35 டாலராக இருந்தது. இப்போது அது 135 டாலராக அதிகரித்துவிட்டது.

நம் நாட்டின் தேவையில் 75 கச்சா எண்ணெயை இறக்குமதி தான் செய்கிறோம். இதனால் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடுகள் நிர்ணயம் செய்யும் விலையை நம்பித்தான் நாம் இருக்க வேண்டிய சூழல்.

ஆனாலும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை தடை செய்து, இறக்குமதியை அதிகரிக்க தாராளமான சலுகைகளை அளித்துள்ளோம்.

சுங்க-கலால்- விற்பனை வரிகளை குறைத்துள்ளோம். விலைவாசியைக் குறைக்க இன்னும் என்ன தான் செய்வது. யாராவது நல்ல யோசனை சொன்னால் அதை ஏற்க நான் தயார்.

இன்னும் வரியைக் குறைக்க வேண்டும் என்கிறார்கள். அப்படிக் குறைத்தால் அரசின் வருமானம் குறையும். இதனால் செலவைக் குறைக்க வேண்டி வரும். அப்படியொரு நிலை வந்தால் எந்தத் திட்டத்தில் கையை வைப்பது.

ஆனாலும் விலைவாசியைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக, கொள்கைரீதியிலான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது. இதனால் பண வீக்கம் குறையும், விலைவாசியும் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மாணவர்கள் கல்விக் கடன் பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தால் அதற்கான பதில் உரிய தருணத்தில் கிடைக்கும். அதன் பிறகு வங்கிக்கு சென்று உரிய ஆவணங்களை காட்டி கடன் பெறலாம். அதனால் தான் கல்வி கடன் கொடுப்பதை எனது நேரடி கட்டுப்பாடில் வைத்துள்ளேன்.

தகுதி இருந்தும் கல்வி கடன் கொடுக்க வங்கி அதிகாரிகள் முன் வரவில்லை என்றால் அது குறித்து தகுந்த ஆதாரங்களுடன் எனக்கு கடிதம் அனுபினால் 10 தினங்களுக்குள் பதில் கிடைக்கும்.

கல்வி கடன் பெற பெற்றோர்கள் கையெழுத்து தவிர எந்த ஆவணங்களையும், உத்தரவாதத்தையும் கேட்க கூடாது என வங்கி அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

அதையும் மீறி கல்வி கடன் கொடுக்க மறுத்து செயல்படும் அதிகாரிகளின் பெயரை கூறினால் 24 மணி நேரத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

'ஏசியன்' நூற்றாண்டு:

முன்னதாக சென்னையில் யூகோ வங்கியின் அகில இந்திய ஊழியர்களின் கூட்டமைப்பின் 13வது மாநாட்டில் சிதம்பரம் பேசுகையில்,

1997ம் ஆண்டு யூகோ வங்கி ரூ. 211 கோடி நஷ்டத்தில் இயங்கியது. வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினை அழைத்து பேசினேன். இப்போது அது ரூ.412 கோடி நிகர லாபம் எட்டியுள்ளது. 1,961 கிளைகளுடன் விளங்குகிறது.

மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க 2003-04ம் ஆண்டு ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.34,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு மாணவருக்கும் கல்விக் கடன் மறுக்கப்படாது.

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படாது என்று உறுதியளிக்கிறேன். ஸ்டேட் வங்கிக்கு நன்றாக இயங்க ரூ.10,000 கோடியை அரசு வழங்கி உள்ளது. அதுபோல யூகோ வங்கிக்கும் தேவைப்பட்டால் வழங்கப்படும்.

இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் சங்கம் கொடுத்துள்ள சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள், நீங்கள் ஒரு நாள் கூட வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத அளவுக்கு நிறைவேற்றப்படும்.

இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. இந்தியாவில் ஏழைகள் உள்ளனர். ஆனால் இந்தியா ஏழை நாடுஅல்ல. மிக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா ஒன்றாக திகழ்கிறது.

அறிவுசார் சமூகத்தை வளர்த்து வருகிறோம். சீனாவும் இந்தியாவும் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றன. 21ம் நூற்றாண்டு 'ஏசியன்' நூற்றாண்டாக விளங்கும் என்றார் சிதம்பரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X