பொன்னி அரிசிக்கு மலேசியா காப்புரிமை-வழக்கு தொடர வேளாண் பல்கலை. முடிவு
கோவை: பொன்னி அரிசிக்கு மலேசியாவைச் சேர்ந்த நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த அரிசி நிறுவனம் ஒன்று தமிழகத்தின் பொன்னி அரிசிக்கு காப்புரிமை பெற்றுள்ளது. இது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பலக்லைக்கழகத்தால் 1986ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி என்கிற சன்ன ரக அரிசி வெளியிடப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள ஒரு அரிசி நிறுவனம் பொன்னி என்கிற பெயரில், வர்த்தக சின்னம் பெற்றுள்ளது. இது காப்புரிமை அல்ல.
இதுகுறித்து அரிசி வர்த்தகர்களும், ஆலை அதிபர்களும், விவசாயிகளும் பெரும் கவலை அடைந்துள்ளனர். மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னியைப் போலவே, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால், 1998ம் ஆண்டு ஆடுதுறை43-க்கு அதிசிய பொன்னி எனவும், 2007ம் ஆண்டு வெளியிடப்பட்ட கோ - ஆர் - 48க்கு பொதிகை பொன்னி எனவும் வர்த்தக பெயர்கள் உள்ளன.
அதிசய பொன்னி மற்றும் பொதிகை பொன்னி ஆகிய ரகங்கள் ஏற்கனவே பதிவுரிமைக்காக இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த 3 ரகங்களும் லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்படுகின்றன.
தற்போது மலேசிய நிறுவனம் பொன்னி என்கிற பெயரில் வர்த்தக சின்னம் பெற்றுள்ளது தவறான ஒன்றாகும். இதனை சட்டப்படி எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எடுத்து வருகிறது. இதுகுறித்து காப்புரிமை மற்றும் சட்ட நிபுணர்களிடம் கலந்தாலோசனை நடந்து வருகிறது. எனவே வேளாண் பெருமக்கள், அரிசி வர்த்தகர்கள் மற்றும் ஆலை அதிபர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார் ராமசாமி.












Click it and Unblock the Notifications