தொடங்கியது பருவமழை-குற்றாலத்தில் குளுகுளு சீசன்
தென்காசி: தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால், குற்றாலத்தில் சீசன் தொடங்கும் அறிகுறிகள் தோன்றியுள்ளன.
தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தீவிரமடைய தொடங்கியுள்ளது. அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழக-கேரள எல்லைப் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
நேற்று மதியம் முதல் குற்றாலம், மேக்கரை, புளியரை, தென்காசி, செங்கோட்டை, அச்சன்கோவில், ஆரியங்காவு, குண்டாறு நீர்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் கருமேகம் திரண்டு, சாரல் மழை பெய்ய தொடங்கியது.
சாரல் மழை பெய்ய தொடங்கிவிட்டதால் குற்றாலத்தில் இன்னும் ஒரிரு வாரங்களில் முழுமையாக சீசன் தொடங்கிவிடும். தற்போது மெயின் அருவியில் கொஞ்சம் போல் தண்ணீர் விழுகிறது.
படகு குழாமிற்கு ரூ.5.50 லட்சத்தில் புதிய படகுகள்
இதற்கிடையே, ஐந்தருவி படகு குழாமுக்கு ரூ. 5.50 லட்சத்தில் படகுகள் வாங்கப்படவுள்ளன.
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்கிற்காக ஐந்தருவி வெண்ணமடை குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக சுற்றுலா துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இப்படகு குழாமில் சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்வார்கள்.
இந்த ஆண்டு சீசன் எந்நேரமும் துவங்கலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் படகு குழாமிற்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 5 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 19 புதிய படகுகள் கொண்டு வரப்படுகிறது.
இதன் முதல் கட்டமாக 4 படகுகள் இரு இருக்கைகள் கொண்டவை கொண்டு வரப்பட்டது. வண்ண கலரில் உள்ள இப்படகுகளில் குழந்தைகளை கவரும் வகையில் பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மேலும் 5 படகுகள் வருகிறது. ஐந்தருவியில் தண்ணீர் கொட்டியதும் படகு குழாமிற்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு விடும். படகு குழாமில் தண்ணீர் நிரம்பியதும் படகு சவாரி துவக்கப்படும்.-












Click it and Unblock the Notifications