சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட தஞ்சை இளைஞர் மர்ம சாவு
தஞ்சாவூர்: சிங்கப்பூர் சிறையில் தஞ்சாவூரைச் சேர்ந்த வாலிபர் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது உடலைக் கொண்டு வர உதவ வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வாலிபரின் குடும்பத்தினர் மனு கொடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் நெம்மேலி திப்பியக்குடி கிராமம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜு என்பவரின் மகன் காட்டுராஜா (31). கடந்த 1997ம் ஆண்டு சிங்கப்பூரில் வேலை பார்க்கச் சென்றார்.
இந்த நிலையில், உரிய அனுமதி இல்லாமல் தங்கியிருந்ததாக கூறி காட்டு ராஜாவை சிங்கப்பூர் போலீஸார் 3 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். ஆனால் சிறையில் காட்டு ராஜா இறந்துவிட்டதாக தற்போது தகவல் வந்துள்ளது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து சிங்கப்பூர் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில் காட்டுராஜாவின் தந்தை, தாயார், உறவினர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து அவரது உதவியாளர் ராஜுவிடம் புகார் மனு கொடுத்தனர்.
அதில், டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றின் மூலம் காட்டுராஜா சிங்கப்பூருக்குச் சென்றார். அங்கு வேலை கிடைக்காததால், கடந்த 11 வருடங்களாக அங்கேயே தங்கிவிட்டார்.
இந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு அனுமதி இல்லாமல் தங்கியதாக கூறி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக அதே சிறையில் இருந்த ஒருவர் மூலம் எங்களுக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, 22.5.2008 அன்று சிறையில் இறந்து போனதாக உறுதி செய்தனர். காட்டுராஜாவின் உடலை அனுப்புவது குறித்து எந்தப் பதிலையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.
எனது மகன் நல்ல ஆரோக்கியத்துடன்தான் இருந்தான். அவனைக் கொலை செய்திருப்பார்களோ என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இதில், தலையிட்டு எனது மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications