பாளை. சிறை சுவரில் இருந்து விழுந்து கைதி பலி
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறைச் சுவரில் ஏறிய கைதி கீழே விழுந்து பலியானார்.
திருவேங்கடம் அருகேயுள்ள வடக்கு பாறைப்பட்டியை சேர்ந்த முத்து மகன் தேவசகாயம். இவர் திருவேங்கடத்தில் வனக்காவலராக பணியாற்றினார். இவருக்கு மதுப் பழக்கம் இருந்தது.
இவர் குடி போதையில், மனைவி, மகள்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் தேவசகாயகத்திற்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை ஜெயில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயில் ஆஸ்பத்திரியில் இருந்த தேவசகாயம் ஆஸ்பத்திரிக்கு பின்புறம் உள்ள பழைய சுவரில் ஏறினார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
அவரை ஜெயில் பணியாளர்கள் பாளை அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஜெயிலில் கைது இறந்ததால் அவர் சாவு குறித்து நெல்லை ஆர்டிஓ மேல்விசாரணை நடத்த உள்ளார்.