பிரவுன் சுகர்: முன்னாள் 'வளர்ப்பு' சுதாகரனுக்கு பிடிவாரண்ட்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன். தியாகராய நகரில் உள்ள இவரது வீட்டில் 2001ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி போலீசார் சோதனை நடத்தி 16 கிராம் பிரவுன் சுகரை கைப்பற்றினர்.
இதையடுத்து சுதாகரன், போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் 'தோட்டம் பாஸ்கரன்', மொய்னுதீன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது போதை பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சென்னை போதை பொருட்கள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கு விசாரணைகளில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் சுதாகரன். இதையடுத்து ஏற்கனவே அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதால் வாரண்ட் ரத்து செய்யப்பட்டது.
இந் நிலையில் இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 28ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் சுதாகரன் ஆஜராகவில்லை. நேரில் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, சுதாகரனுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications