தோட்டா சப்ளை- சப்-இன்ஸ்பெக்டர் கைது
சென்னை: நெல்லையில் போலீஸார் நடத்திய அதிரடி நடவடிக்கையில், கள்ளத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ரியல் எஸ்டேட் அதிபரும், காண்டிராக்டர் ஒருவரும் சிக்கினர். இவர்களுக்கு துப்பாக்கித் தோட்டாக்களை விற்றதாக சப் இன்ஸ்பெக்டர் சிக்கியுள்ளார்.
நெல்லை பஸ் நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி ஜெயின், நெல்லை போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார் நெல்லை பஸ் நிலையத்தை மாறுவேடத்தில் கண்காணித்தனர்.
அப்போது ரவி (36) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து அவரை சோதனை செய்தபோது அவரிடம் இருந்து 9 எம்.எம். ரக துப்பாக்கியில் பயன்படுத்தும் 13 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது. உடனடியாக போலீசார் அவரை பிடித்து கியூ பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
ரவி காண்டிராக்டர் ஆவார். பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் வீடு உள்ளது. தற்போது சென்னை சூளைமேடு ஜக்கரியா காலனியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் கொடுத்த தகவலின்பேரில், நெல்லை பஸ் நிலையத்தில் ஜெகன் (30) என்ற ரியல் எஸ்டேட் அதிபர் சிக்கினார்.
ஜெகன் காஞ்சீபுரம் மாவட்டம், விநாயகபுரம் காரணி புதுச்சேரியை சேர்ந்தவர். இவரிடம் 9 எம்.எம். நவீன ரக கள்ளத் துப்பாக்கியும், 2 தோட்டாக்களும் சிக்கியது. ஜெகனிடம் போலீசார் விசாரித்தபோது அவர் திடுக்கிடும் தகவலை வாக்குமூலமாக வெளியிட்டார்.
போலீஸாரிடம் ஜெகன் கூறுகையில், நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் எனக்கு நிறைய எதிரிகள் உள்ளனர். கொலை மிரட்டல்களும் வந்தது. இதனால் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொள்ள முடிவு செய்தேன். இதற்காக செங்கல்பட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரை அணுகினேன்.
ராதாகிருஷ்ணன் தனக்கு தெரிந்த வக்கீல் குமாஸ்தா முருகன் என்பவர் நெல்லையில் இருப்பதாகவும், முருகனும், அவரது உறவினரான முருகேசன், சென்னை சூளைமேட்டை சேர்ந்த காண்டிராக்டர் ரவி ஆகியோர் துப்பாக்கி வாங்கி தருவார்கள் என்றும் குறிப்பிட்டார். இதற்கு ரூ. ஒன்றே கால் லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டார்.
நானும் பணத்தைக் கொடுத்தேன். பணத்தை வாங்கிக்கொண்டு 9 எம்.எம். நவீன ரக துப்பாக்கியும், 4 தோட்டாக்களும் எனக்கு கொடுத்தனர். தூத்துக்குடியை சேர்ந்த செல்வம் என்பவரிடம் இருந்து இந்த துப்பாக்கியையும், தோட்டாவையும் வாங்கி கொடுத்ததாக கூறினார்கள். மேலும் எனக்கு கூடுதலாக துப்பாக்கி தோட்டாக்கள் தேவைப்பட்டது.
அந்த துப்பாக்கி தோட்டாக்களை வாங்கி தருகிறேன் என்றும், நெல்லைக்கு வாருங்கள் என்றும் ரவி என்னிடம் கூறினார். நெல்லை நகர ஆயுதப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் பாண்டியராஜன் (50) என்பவர் இந்த துப்பாக்கி தோட்டாக்களை சப்ளை செய்ய சம்மதித்துள்ளதாகவும் ரவி என்னிடம் தெரிவித்திருந்தார்.
நெல்லை பஸ் நிலையத்தில் வைத்து துப்பாக்கி தோட்டாக்களை தருவதாகவும் ரவி தகவல் அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில் நான் நெல்லை வந்தேன் என்றார்.
இதையடுத்து எஸ்.ஐ. பாண்டியராஜனையும், கியூ பிரிவு போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். துப்பாக்கி தோட்டாக்கள் விற்பதற்காக பாண்டியராஜன் எவ்வளவு பணம் வாங்கினார், அவருக்கு துப்பாக்கி தோட்டாக்கள் எங்கிருந்து கிடைத்தது என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கைதாகியுள்ள ரவி ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் கைதாகி ஒரு ஆண்டு ஜெயிலில் இருந்துள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் இலங்கைக்கு கடத்துவதற்காக பிளாஸ்டிக் பொருட்கள், மோட்டார் காயல்கள், காயல் சுற்றும் இயந்திரங்கள் மற்றும் எவரடி பேட்டரிகள் போன்றவை பரமக்குடியில் அப்துல்லா என்பவர் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
தனிப்படை போலீசார் உடனடியாக பரமக்குடியில் அதிரடி சோதனை நடத்தி, மேற்கண்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். எனவே, தற்போது பிடிபட்டுள்ள ரவி, ஜெகன் ஆகியோருக்கு விடுதலைப்புலிகளோடு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications