'வருந்துகிறார்-விமர்சிக்கிறார்-மக்கள் அழுகிறார்கள்'

விலையேற்றத்திற்கு கம்யூனிஸ்டுகளுக்கும் பொறுப்புண்டு. ஆனால் போராட்டம் நடத்துகிறார்கள். ஏன் போராடுகிறார்கள்? அவர்களை எதிர்த்து அவர்களே போராடுகிறார்களா? என பாஜக தேசிய துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
மதுரையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
விலைவாசி உயர்வை எப்படி கட்டுப்படுத்துவது என்று ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை. பிரதமர் வருந்துகிறார். எதிர்க்கட்சிகளை ப.சிதம்பரம் விமர்சிக்கிறார். திட்டக்கமிஷன் துணை தலைவர் அலுவாலியா, அரசினுடைய இயலாமையை கூறுகிறார். மக்கள் அழுகிறார்கள்.
நாட்டின் தெற்கு பகுதியில் கோதுமை சாப்பிடுகிறார்கள். வடக்குப் பகுதியில் அரிசி சாப்பிடுகிறார்கள். அதனால்தான் பொருட்களின் விலை ஏறுகிறது என ஒரு அமைச்சர் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சர், உலக அளவில் விலைவாசி உயர்ந்துள்ளது' என்கிறார். மற்றொரு அமைச்சர், விலைவாசியை கட்டுப்படுத்த மந்திரக்கோல் இல்லை என்கிறார்.
இதையெல்லாம்விட இன்னொரு அமைச்சர் விலைவாசி உயர்வுகளுக்கு பாரதீய ஜனதாதான் காரணம் என்கிறார்.
பிரதமர் மன்மோகன்சிங் தவறான தகவல்களை தெரிவித்து மக்களை பீதியடைய செய்யக்கூடாது என எதிர்க்கட்சிகளிடம் கூறுகிறார். நாட்டில் உணவுப்பொருள் தட்டுப்பாடு உள்ளதா? இல்லையா?
இன்றைக்கு நாட்டின் அனைத்து பொருட்களும் விலைவாசி உயர்ந்துவிட்டது. உதாரணத்திற்கு எங்களது ஆட்சியின்போது கிலோ ரூ.2க்கு விற்ற ஒரு கிலோ உப்பு இன்றைக்கு ரூ.6 ஆகி விட்டது.
உணவுப் பொருட்களின் விலை இன்னும் 20 சதவிகிதம் உயரும் என்கிறார்கள். சூழ்நிலை மிக மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. எனவே மத்திய அரசு பதவி விலகுவது தான் அவர்களுக்கும் மக்களுக்கும் நல்லது.
கம்யூனிஸ்டு கட்சியினர் மந்திரி சபைக்குள் பச்சைக்கொடி காட்டுகிறார்கள். வெளியே வந்தால் சிவப்புக் கொடியை காட்டுகிறார்கள்.
விலையேற்றத்திற்கு கம்யூனிஸ்டுகளுக்கும் பொறுப்புண்டு. ஆனால் போராட்டம் நடத்துகிறார்கள். ஏன் போராடுகிறார்கள்? அவர்களை எதிர்த்து அவர்களே போராடுகிறார்களா?
பாஜகவை வட மாநில கட்சி, இந்துக் கட்சி என்றெல்லாம் கூறினார்கள். கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்ததன் மூலம் அந்த நிலையெல்லாம் இப்போது மாறிவிட்டது என்றார் நாயுடு.
சேது சமுத்திர திட்டத்தை சேது ராம்' என்று வைத்துக்கூட நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு பதிலளித்த நாயுடு,
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications