இலவச டிவி வேண்டாம்? கேஸ் விலையை குறையுங்கள்-ஜெ
சென்னை: தமிழக அரசு இலவச டி.வி, இலவச கேஸ் அடுப்பு போன்றவற்றை நிறுத்திக் கொண்டு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை ஏற்றுக் கொண்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் கடும் விலை உயர்வு காரணமாக இந்தியா பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பணவீக்கம் 12 சதவீதம் வரை உயரும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு விலைவாசி விஷம் போல் ஏறிவிட்ட நிலையில், மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தி மக்களை மேலும் வேதனைக்கு ஆளாக்கி இருக்கிறது.
எனது கோரிக்கையை ஏற்றதாகக் கூறி டீசலுக்கான விற்பனை வரியை 2 சதவீதம் குறைத்திருப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார். இது வெறும் கண்துடைப்பு நாடகம். பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அப்படியே தான் உள்ளது.
ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கட்டணங்களை ஏற்கெனவே உயர்த்தி விட்டனர். இந்நிலையில் டீசலுக்கான விற்பனை வரிக் குறைப்பினால் தமிழக மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை.
தற்போது இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. அனைத்துப் பொருட்களின் விலையும் மூன்று மடங்கு, நான்கு மடங்கு உயர்ந்துவிட்டது.
சொந்தமாக வீடு வாங்கவும், கட்டவும் முடியாமல் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டு வாடகை பன்மடங்கு உயர்ந்து விட்டது.
ஒவ்வொருவரின் குடும்பத்திலும் மாதம் ரூ. 5,000 அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் மக்களின் நலனில் அக்கறைக் கொண்டு மத்திய அரசு இந்த விலை உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் அல்லது தமிழக அரசு இலவச டி.வி, இலவச கேஸ் அடுப்பு போன்றவற்றை நிறுத்திக் கொண்டு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை ஏற்றுக் கொண்டு மக்களை காப்பாற்ற வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications