இடதுசாரிகள் விமர்சனம்-விஜயகாந்த் பதில் தாக்கு
பழனி: என்னைப் பார்த்து பச்சைக் குழந்தை என்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியினர். நான் பச்சைக் குழந்தையா இல்லையா என்பதை மக்கள் தேர்தலின்போது தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், நடந்த திருமண விழாவில் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்துகொண்டார்.
விழாவில் அவர் பேசுகையில், என்னைப் பார்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பச்சைக் குழந்தை என்கின்றனர். நான் யார் என்பதை மக்கள் தேர்தலின்போது தீர்ப்பளிப்பார்கள்.
தேமுதிகவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. கட்சியில் யார் வேண்டுமானாலும், கிளைத் தொண்டன் கூட மாவட்ட செயலாளராக முடியும். கட்சியில் காசு வைத்திருப்பவர்கள், கார் வைத்திருப்பவர்கள் தான் மாவட்ட செயலாளராக முடியும் என்பது கிடையாது.
கூட்டணியில் இருந்து கொண்டே பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி விட்டு இப்போது போராட்டம், பந்த் என்கிறார்கள் இடதுசாரிக் கட்சியினர்.
நான் தனி மனிதனாக தான-தர்மம் செய்துள்ளேன். ஆனால் தனி மனிதனாக மக்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. அதற்குத் தேவை அரசாங்கம். எனவேதான் தேமுதிகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்கிறேன்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுக்கு வாய்ப்பளியுங்கள். எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்.
ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வேன். முடியாவிட்டால், அரசியலுக்கே குட்பை சொல்லி விட்டு போய்க் கொண்டிருப்பேன். நான் சூட்கேஸ் வாங்க நினைத்திருந்தால், அதைச் செய்து திருமண மண்டபம் உள்ளிட்ட சொத்துக்களை காப்பாற்றியிருக்கலாம்.
நான் தனியாகத்தான் நிற்பேன். அந்தத் தைரியம் எங்களுக்கு உள்ளது. தெய்வத்தையும், மக்களையும் நம்பித்தான் நான் கட்சி ஆரம்பித்தேன் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications