புதுச்சேரியில் திமுக-அதிமுக பயங்கர மோதல்: துப்பாக்கிச் சூடு

புதுச்சேரி நெல்லித்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதாசிவம், வேலன். இருவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள், கவுன்சிலர்களாக உள்ளனர். சதாசிவத்திற்கு டி.ஆர். நகர் பகுதியில் அரிசி ஆலை உள்ளது.
நேற்று மாலை இந்த ஆலைக்கு அதிமுகவைச் சேர்ந்த சிலர் கும்பலாக வந்தனர். உள்ளே புகுந்து சரமாரியாக அடித்து நொறுக்க ஆரம்பித்தனர்.
அதேபோல வேலனுக்குச் சொந்தமான ரத்தப் பரிசோதனை மையத்திலும் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அரிசி ஆலைக்கு திமுகவினர் வந்தனர். திமுக எம்.எல்.ஏ சிவாவும் அங்கு வந்தார். அப்போது அதிமுக எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் தலைமையில் அதிமுகவினர் குவிந்தனர். இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அது மோதலாக மாறியது.
இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். கைக்குக் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து தாறுமாறாக அடித்துக்கொண்டனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், இரு தரப்பினரையும் தடியடி நடத்திக் கலைக்க முயன்றனர். ஆனால் மோதலில் ஈடுபட்டவர்கள் கலைவதாகத் தெரியவில்லை. இதையடுத்து வானத்தை நோக்கி இருமுறை எஸ்.ஐ. ஸ்ரீதர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கு பதட்டம் அதிகரித்தது.
அதிமுகவினர் ஓம் சக்தி சேகர் தலைமையில் அங்கிருந்து அகன்றனர். திமுகவினர் நகர திமுக அலுவலகத்திற்குச் சென்று அங்கு ஓம் சக்தி சேகர் உள்ளிட்டோரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி சாலை மறியலில் குதித்தனர். பின்னர் அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
தொடர்ந்து பெரும் பதட்டம் நிலவி வருவதால் நெல்லித்தோப்பில் உள்ளூர் போலீஸாரோடு, ரிசர்வ் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications