ஜெ. பாதுகாப்பு-எஸ்பி ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து எஸ்பி ரேங்கி்ல் உள்ள அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனக்கு மீண்டும் இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், எனக்கு 2001 முதல் 2006 வரை இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பின்னர் அந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு விட்டது.
எனது உயிருக்கு விடுதலைப் புலிகள் மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் உள்ளது. எனது வீட்டை சுற்றி மர்ம மனிதர்கள் நடமாட்டம் உள்ளது. எனவே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுக்கு வழங்கப்பட்டது போல இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு குண்டு துளைக்காத கார் வழங்க உத்தரவிட்டது.
ஆனால், முன்பே ஜெயலலிதாவுக்கு குண்டு துளைக்காத அம்பாசிடர் கார் வழங்கப்பட்டதாகவும், அதை அவர் தான் வேண்டாம் என கூறிவிட்டதாகவும் தமிழக அரசு விளக்கம் தந்தது.
நீதிமன்ற உத்தரவையடுத்து மீண்டும் ஜெயலலிதாவுக்கு அம்பாசிடர் கார் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதை பயன்படுத்தவில்லை என தமிழக அரசு குற்றம் சாட்டியது.
இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை வழங்கினார். அதில்,
ஜெயலலிதாவின் பாதுகாப்பு குறித்து எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர் ஆய்வு செய்ய வேண்டும். ஜெயலலிதாவை நேரில் சந்தித்து இந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
2 வாரத்துக்குள் ஆய்வு தொடங்கப்பட வேண்டும். பின்னர் அந்த ஆய்வறிக்கையை பாதுகாப்பு மறு ஆய்வு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவரது பாதுகாப்பை மேம்படுத்த குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தொடர வேண்டும்.
தனது பாதுகாப்பு குறித்து ஜெயலலிதா தெரிவித்துள்ள கவலை ஏற்கத்தக்கதாகவே உள்ளது. அதே நேரத்தில் இந்த வழக்கில் தற்போதைய முதல்வருக்கு (கருணாநிதி) எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஏற்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications