அரசு பள்ளிகளில் அதிகாரிகள் குழந்தைகள்-விஜய்காந்த்
நாமக்கல்: அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என சட்டம் கொண்டு வர வேண்டும் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
நாமக்கல்லில் பல்வேறு கட்சிகளில் இருந்து பலர் தேமுதிகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் விஜயகாந்த் பேசுகையி்ல்,
இங்கு பிற கட்சிகளில் இருந்து விலகி பலர் தேமுதிகவில் இணைந்துள்ளனர். அவர்களிடம் அனுபவம் மற்றும் ஆற்றல் உள்ளது. அது எனது கட்சிக்கு தேவை. பாதைகள் வேறு, ஆனால் சேரும் இடங்கள் ஒன்று தான். எங்கள் கொள்கைகளை பின்பற்றினால் போதும்.
நன்றாக சிந்தித்து பாருங்கள். காமராஜர் 3 முறையும், எம்.ஜி.ஆர். 2 முறையும் தொடர்ச்சியாக முதல்வர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது திமுக, அதிமுக ஆட்சி தொடர்ச்சியாக இருப்பதில்லை. ஏன்?.
நீங்கள் மாறி மாறி ஓட்டு போட்டீர்கள், அதற்கு கிடைத்தது விலைவாசி ஏற்றம் தான். கடந்த 1967ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து திமுகவினர் கோஷம் போட்டனர்.
தற்போது விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை மாற்ற ஆட்சி மாற்றம் வேண்டும். மக்கள் தான் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
மத்திய அமைச்சர் சிதம்பரம் கூட விலைவாசி உயர்வுக்கு கவலை தெரிவித்து, யோசனை கேட்டு வருகிறார். முதல்வரின் வழிகாட்டுதலோடு மத்தியில் ஆட்சி நடத்துவதாக கூறுகிறார்கள் அவரிடம் விலைவாசி உயர்வு பற்றி சிதம்பரம் பேசமாட்டாரா?
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த 1998ம் ஆண்டு ரூ. 450 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டது. அப்போது நிறைவேற்றாததால் இந்த திட்ட மதிப்பு இன்று ரூ. 1,300 கோடியாக உயர்ந்துவிட்டது.
நாமக்கல் கோழி, முட்டை உற்பத்தியில் 2வது இடத்தில் உள்ளது. ஆனால் கோழித் தீவன மூலப்பொருட்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ளதால் விலை உயர்ந்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு தீவனம் கிடைப்பதில்லை.
இதேபோல் விவசாயிகளுக்கு உரம் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
நான் சட்டசபையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடையில் நின்றுவிடும் நிலை உள்ளதாகக் கூறினேன். அப்போது மறுத்தவர்கள் இன்று அதற்காக ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் மார்க் குறைவாக பெறுகிறார்கள். அதற்கு காரணம் நிர்வாகம் சரியில்லாதது தான். ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம்.
முதலில் அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என சட்டம் கொண்டு வரவேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கு கடனுதவியை முறையாக வழங்குவது இல்லை.
நான் ஆட்சிக்கு வந்தால் சமச்சீர் கல்வி கொடுப்பேன். ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும். போலி ரேசன் கார்டுகள் ஒழியும். படிக்காத இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு வேலை உத்தரவாதம் இல்லை. நான் ஆட்சிக்கு வந்தால் படிக்காத இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன். என்னை பொருத்தவரையில் நாளை நமதே, நாற்பதும் நமதே.
கவர்ச்சிகரமான திட்டங்கள் வேண்டாம், வளர்ச்சிகரமான திட்டங்களை நிறைவேற்றுங்கள். பெண்களால் தான் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறும். அதுபற்றி கேட்டால் கொள்கை ஒத்துப் போவதாக கூறுவார்கள்.
பெட்ரோல், டீசல் விலை கடந்த 20 ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது. கரும்பில் இருந்து எத்தனால் தயாரித்து பெட்ரோலுடன் கலக்கும் தொழிற்சாலைகள் இல்லை. அவ்வாறு கலந்து விற்பனை செய்தால் நிச்சயமாக விலை குறையும் என்றார் விஜய்காந்த்.












Click it and Unblock the Notifications