தனக்கான அரசு செலவை குறைக்க பிரதமர் உத்தரவு
டெல்லி: அமைச்சர்களையும் மக்களையும் சிக்கனமாக இருக்குமாறு கோரிக்கை விடுத்த பிரதமர் மன்மோகன் சிங், முதல்கட்டமாக தனக்கான அரசு செலவுகளை குறைக்க ஆரம்பித்துள்ளார்.
உலக அளவிலான கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலைகளை மத்திய அரசு உயர்த்தியது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர், நாட்டு மக்கள் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றை சிக்கனமாக பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். தண்ணீரையும் கூட நாம் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் பிரதமர் தனித் தனியாக அனுப்பிய கடிதத்தில், தேவையில்லாத செலவுகளை குறைக்குமாறு உத்தரவிட்டார்.
மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் விமான பயண செலவை குறைக்க வேண்டும். குறிப்பாக வெளிநாட்டுப் பயணத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந் நிலையில் தனக்காக அரசு செலவிடும் தொகையை குறைக்க ஆரம்பித்துள்ளார் மன்மோகன் சிங்.
ஜப்பானில் நடக்கவுள்ள ஜி-8 நாடுகளின் கூட்டத்தி்ல் பங்கேற்கச் செல்லும் பிரதமர் தன்னுடன் வரும் பாதுகாப்புப் படையினர், அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு ஆணையிட்டுள்ளார்.
தன்னுடன் தேவையில்லாமல் எந்த அமைச்சரும் வெளிநாடுகளுக்கு வர வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
விரைவில் மத்திய அரசு வாகனங்கள் அனைத்திற்கும் பெட்ரோல் செலவை கட்டுப்படுத்த அவர் உத்தரவிடுவார் எனத் தெரிகிறது. ரேஷன் முறையில் இந்த வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்க அவர் உத்தரவிடலாம் எனக் கூறப்படுகிறது.
மத்திய அரசின் கருத்தரங்குகள், மாநாடுகளை 5 நட்சத்திர ஹோட்டல்களில் நடத்துவதை நிறுத்துமாறு அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications