போலீஸாரால் கற்பழிப்பு- காவல் நிலையம் முன் தற்கொலை
டெல்லி: போலீஸாரால் கற்பழிக்கப்பட்ட அப்பாவிப் பெண், தனக்கு நியாயம் கிடைக்காததால், சம்பந்தப்பட்ட காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஹரியானா மாநிலம் பன்ச்குலாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் ஷீலா. கடந்த ஏப்ரல் 10ம் தேதி இவரை ரோதக் காவல் நிலையத்தைச் சேர்ந்த பல்ராஜ் சிங், ஷீலக்ராம் ஆகிய இரு போலீஸாரும் கற்பழித்துள்ளனர்.
26ம் தேதி மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தார் ஷீலா. புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.
மே 10ம் தேதி குற்றவாளிகளை அடையாளம் காட்டினார் ஷீலா. ஆனாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து மே 23ம் தேதி ஐடி அனில்தப்ராவை சந்தித்து முறையிட்டார் ஷீலா.
அவரது உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கற்பழிப்பு நடந்தது உண்மைதான் என்று டி.எஸ்.பி. தனது அறிக்கையில் தெரிவித்தார்.
மே 31ம் தேதி இரு போலீஸார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் மேல் நடவடிக்கை இல்லை.
மேலும், புகாரை திரும்பப் பெறுமாறு இரு போலீஸாரும், ஷீலாவை மிரட்டி வந்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த ஷீலா பஞ்ச்குலாவில் உள்ள மாவட்ட காவல்துறை தலைவர் அலுவலகம் முன்பு விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து ரோதக் ஐஜி விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலைக்குத் தூண்டியதாக இரு போலீஸார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட ஷீலாவுக்கு 6 வயதில் ஹீனா என்கிற மகளும், 3 வயதில் முஸ்கான் என்கிற மகளும் உள்ளனர். பன்ச்குலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஷீலா உயிரிழந்தபோது இரு குழந்தைகளும் செய்தவறியாமல் பரிதவித்து நின்றது மிகவும் பரிதாபமாக இருந்தது.
மரணமடையும் தருவாயில் ஷீலா கொடுத்த வாக்குமூலத்தில், பல்ராஜ்சிங்கும், ஷீலக் ராமும் என்னைக் கற்பழித்தனர். இதை வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டினர். நான் வெளியில் சொன்னால் திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட எனது கணவரை திரும்பப் பார்க்கவே முடியாது என்றும் மிரட்டினர் என்றார்.












Click it and Unblock the Notifications