தென்காசி கோவில் கிணற்றை தூர் வாரிய இருவர் பலி
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கிணற்றில் தூர் வாரியபோது இரு தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் மாடப்பள்ளியில் மிகவும் பழமையான கிணறு உள்ளது. இந்த கிணற்றை தூர் வாருவதற்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
தென்காசியை அடுத்த ஆயிரபேரி பட்டாபத்து கிராமத்தை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் காவேரி, மாடசாமி மகன் ஆறுமுகம், சுப்பிரமணியன் மகன் சண்முகவேல், முத்துகருப்பன் மகன் ஆறுமுகம் ஆகிய 4 பேர் தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 35 அடி உயரமுள்ள கிணற்றில் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் கிடந்துள்ளது.
இதில் சுமார் 15 உயரத்திற்கு தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றிய நிலையில் மீதமுள்ள 5 அடி உயர தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற முடியவில்லை. இதனையடுத்து ஆறுமுகம், சண்முகவேல், மற்றொரு ஆறுமுகம் ஆகிய 3 பேரும் கிணற்றுள் இறங்கி ஒரு பாறை மீது மோட்டாரை பொருத்தியுள்ளனர். பின்னர் மோட்டாரை ஸ்டார்ட் செய்தபோது புகை அதிகமாக வந்தது.
இதில் மூச்சு திணறியதால் சத்தம் போட்டனர். உடனே கிணற்றுக்கு வெளியே நின்ற காவேரி மற்றும் அங்கிருந்த சிலர் தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மாடசாமி மகன் ஆறுமுகத்தை காப்பாற்றினர். இருப்பினும் சண்முகவேல், மற்றும் முத்துகருப்பன் மகன் ஆறுமுகம் இருவரும் மூச்சு திணறி இறந்தனர்.












Click it and Unblock the Notifications