விடைத்தாள் - மார்க் மாறியதால் மாணவி பாதிப்பு
சென்னை: மன்னார்குடியைச் சேர்ந்த மாணவியின் விடைத்தாள் மற்றும் மதிப்பெண்கள் மாறியதால்அந்த மாணவியால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த சிவகாமராஜின் மகள் சிவசக்தி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதினார். அனைத்து பாடங்களிலும் 170க்கு மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்.
ஆனால் உயிரியல் பாடத்தில் மட்டும் அவருக்கு 80 மதிப்பெண்களே வந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார் சிவசக்தி. தமிழில் 175, ஆங்கிலத்தில் 174, இயற்பியலில் 172, வேதியியலில் 182, கணிதத்தில் 192 என மதிப்பெண்கள் கிடைத்த நிலையில் உயிரியலில் மட்டும் 80 மதிப்பெண்கள் தனக்கு எப்படி கிடைத்திருக்கும் என்ற சந்தேகம் அவருக்கு வந்தது.
இதையடுத்து விடைத்தாள் நகலைக் கேட்டுவிண்ணப்பித்தார். நகலைப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அது அவரது விடைத்தாளே இல்லை. வேறு ஒருவரின் விடைத்தாள் அது. சிவசக்தியின் விடைத்தாள் வேறு ஒருவருக்குப் போய் விட்டது.இதனால் வேறு ஒருவரின் மதிப்பெண்ணை, சிவசக்தியின் மதிப்பெண்ணாக சேர்த்து விட்டனர். கல்வித்துறை செய்த குழப்பம் இது.
உயிரியல் பாடத்தில் சிவசக்திக்கு 174 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுதது தேர்வுத்துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தத்திடம் நேரில் சென்று முறையிட்டார். தேர்வுத்துறைசெய்த தவறால் தனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், எம்.பி.பி.எஸ்.சேரும் தனது கனவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முறையிட்டார்.
இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் சிவசக்தியின் விடைத்தாள் மற்றும் மதிப்பெண் மாறியது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்குரிய மதிப்பெண்ணை இணைத்து புதிய மதிப்பெண் சான்றிதழ் தரப்படும் என தேர்வுத்துறை உறுதியளித்துள்ளது.
வருகிற 17ம் தேதிக்குள் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்குள் மதிப்பெண் பட்டியல் சிவசக்திக்குக் கிடைத்தால்தான் அவரால் டாக்டர் படிப்பில் சேர முடியும்.
இது மட்டுமல்ல, இன்னொரு மாணவியின் விடைத்தாளும் இதேபோல மாறியுள்ளது. அவரும் அதே எஸ்.ஆர்.வி. பள்ளியில் படிக்கும் மாணவிதான். அவர் நாகர்கோவிலைச் சேர்ந்த சுவிதா. இவரது விலங்கியல் பாடத்துக்கான விடைத்தாள், மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications