அழகிரியின் கேபிள் விஷன் உதயம்-மதுரையில் சன் சேனல்கள் அவுட்!

சன் நெட்வொர்க்கின் சுமங்கலி கேபிள் விஷன் கட்டுப்பாட்டிலிருந்த ஆபரேட்டர்கள் அனைவரும் நேற்று முன்தினம் மு.க.அழகிரி தொடங்கிய ராயல் கேபிள் விஷனுக்கு மாறியதைத் தொடர்ந்து, சன் குழும சேனல்கள் ஒளிபரப்பை மதுரை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரிக்கும், மாறன் சகோதரர்களுக்குமான மோதலின் அடுத்த கட்டமாக இந்த கேபிள் யுத்தம் பார்க்கப்படுகிறது.
சுமங்கலி கேபிள் விஷன் எனும் பெயரில் தமிழகத்தில் உள்ள கேபிள் டிவி நெட்வொர்க்கையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது சன். இதற்கு செக் வைக்கும் நோக்கில் தற்போது ராயல் கேபிள் விஷன் எனும் புதிய கேபிள் டிவி நிறுவனத்தை அழகிரி தொடங்கியுள்ளார்.
9ம் தேதி திங்கள்கிழை முதல் ராயல் கேபிள் விஷன் தொடங்கப்பட்டுள்ளது. அன்று முதலே மதுரை முழுவதும் சன் குழுமத்தின் சானல்கள் தெரியவில்லை. இதில் தங்களை இணைத்துக் கொள்ளும் கேபிள் ஆபரேட்டர்களுக்கு லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் வழங்கப்படும் என அழகிரி உறுதியளித்ததைத் தொடர்ந்து மதுரையில் சுமங்கலியின் கீழிருந்த அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும் கூண்டோடு அழகிரியின் நிறுவனத்துக்கு மாறி விட்டார்கள். இதனால்தான் சன் குழுமச் சானல்கள் சுத்தமாக தெரியவில்லை.
இதுவரை எஸ்.சி.வி.வசம் இருந்த 450 ஆபரேட்டர்களில் 400 பேர் அழகிரியின் நிறுவனத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதன் காரணமாகவே மதுரையில் சன் டிவி இருட்டடிப்புக்குள்ளாகியுள்ளது.
நேற்று 3 மணி நேரம் மட்டும் சன் டிவி தெரிந்துள்ளது. அதன் பின்னர் அதுவும் தெரியவில்லை.
தங்கள் நிறுவன சேனல்களை வேண்டுமென்றே அழகிரி தரப்பு பிளாக் அவுட் செய்துவிட்டதாக சன் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அழகிரி தரப்போ, "இது வியாபாரம். இதில் எந்த சேனலையும் முடக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள்தான் வேண்டுமென்றே சேனல்களை எங்கள் ஆபரேட்டர்களுக்குத் தராமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
அனைத்து ஆபரேட்டர்களும் எங்களிடம் வந்துவிட்ட ஆத்திரத்தில் இப்படிச் செய்கிறார்கள். ஆனால் கூடிய விரைவில் சன் நெட்வொர்க் தங்கள் சேனல்களை எங்களுக்குத் தரும் என நம்புகிறோம்" என அறிவித்துள்ளார் அழகிரி தரப்பு ராயல் கேபிள் விஷனைச் சேர்ந்த கண்ணன்.
அடுத்து என்ன ஆகப் போகிறதோ?












Click it and Unblock the Notifications