கண்டன தீர்மானம்-ராஜினாமா செய்வாரா முஷாரப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பை பதவி நீக்கம் செய்யும் வகையில் அவருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற அந் நாட்டு புதிய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கி வரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் இதில் மிகத் தீவிரமாக உள்ளார்.
இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் மறைந்த பெனாசிரின் கணவருமான ஆசிப் அலி சர்தாரியும் முன் வந்துவிட்டார்.
முஷாரப் மீது நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்காக ஷெரீப் உருவாக்கியுள்ள 10 அம்ச கண்டன தீர்மானத்தில்,
ராணுவ ஆட்சியை இரண்டு முறை அமல்படுத்தியது, அரசியல் சட்டத்தை மாற்றியது, நவாஸ் ஷெரீபை சிறையில் தள்ளியது, பிரதமருக்கே தெரியாமல் கார்கில் பகுதியில் படைகளை ஊடுருவ வைத்தது, இதன் மூலம் 800க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாக காரணமாக இருந்தது,
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சிறை வைத்தது, துப்பாக்கி முனையில் சர்வாதிகார ஆட்சி நடத்தியது, ராணுவத்தை தன் தனிப்பட்ட படையாகப் பயன்படுத்தியது, தனக்கு ஆதரவான அதிகாரிகளுக்கு சலுகை காட்டியது,
தனது ஆட்சி நீடிப்பதற்காக அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ராணுவத்தை பயன்படுத்தியது, சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா, ராணுவத்தை ஏவி விட்டு அறிவிக்கப்படாத போரை நடத்தியது என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
நவாஸ்-சர்தாரி கட்சிகளுக்கு பெரும்பான்மை உள்ளதால் இந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது நிச்சயமாகிவிட்டது.
நாடாளுமன்றத்தால் கண்டிக்கப்பட்டுவிட்டால் அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடும்.
ஆனால், எதற்கும் வளையாத முஷாரப் தனக்கு எதிரான இந்த கண்டன தீர்மான முயற்சிகளை நவாஸ் ஷெரீப்பின் அரசியல் பழிவாங்கும் செயல் என்று கூறியுள்ளார்.
இந் நிலையில் கண்டனத் தீர்மானம் நிறைவேறுவதற்குள் முஷாரப் ராஜினாமா செய்துவிட வேண்டும் என அரசியல் ஆலோசகர்கள் அவருக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications