'கிரீமிலேயர்' வரம்பை ரூ. 6 லட்சமாக்க கோரிக்கை
டெல்லி: பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவினருக்கான வருமான உச்ச வரம்பை ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 6 லட்சமாக உயர்த்த வேண்டும் என அனைத்து மாநில பிற்பட்டோர் நலத்துறை ஆணையங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதி படைத்தவர்கள், ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சம் உள்ள குடும்பத்தினர், க்ரீமி லேயர் என அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
(முன்னதாக இந்த வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சமாகத் தான் இருந்தது. கடந்த 2004ம் ஆண்டில் தான் இது ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.)
பிற்படுத்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்கள் என்ற பிரிவையே நீக்கி அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும் பல மாநில அரசுகள், இந்த வருமான உச்சவரம்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.
இந் நிலையில், டெல்லியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷனின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேசிய கமிஷன் தலைவர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் 20 மாநிலங்களை சேர்ந்த 36 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதில், பணியில் இருக்கும் பிற்பட்டோருக்கான வருமான உச்சவரம்பை ரூ.10 லட்சமாகவும், பிற்பட்ட விவசாயிகளுக்கான உச்ச வரம்பை 50 ஏக்கர் நிலம் என்றும் அதிகரிக்குமாறு மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் நல கமிஷன் தலைவர்கள் கோரினர்.
பிற மாநிலங்கள் சராசரியாக இதை ரூ. 4 முதல் ரூ. 6 லட்சம் வரை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தன.
இப்போதுள்ள விலைவாசியில் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சம் கொண்டவர்களால் குழந்தைகளுக்கு ஒழுங்காக கல்வி கூட தர முடியாது என கர்நாடக மாநில பிற்பட்டோர் நல கமிஷன் தலைவர் துவாரகநாத் கூறினார். இதனால் க்ரீமி லேயர் வரம்பை ரூ. 10 லட்சமாக உயர்த்துவதே பிற்பட்டோருக்கு உதவியாக இருக்கும் என்றார்.