ராஜபக்சே மகனுக்கு கடற்படை பணி.. இலங்கை மாஜி கடற்படை தளபதி கைது.. உள்நாட்டு போரில் செய்தது தெரியுமா?
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சேவை கடற்படையில் பணிக்கு சேர்த்து வெளிநாட்டில் பயிற்சி வழங்கியது தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னகொடாவை இன்று அதிரடியாக கைது செய்தனர்.
இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே. இவரது 2வது மகன் பெயர் யோஷித ராஜபக்சே. இவர் இலங்கை கடற்படையில் சேர்ந்து பணியாற்றினார். 'கேடட் எக்ஸிக்கியூட்டிவ் ஆபிஸராக' பணியாற்றினார்.

யோஷித ராஜபக்சேவிற்கு உரிய தகுதிகள் இல்லாததும், அவரது தந்தை மஹிந்த ராஜபக்சேவின் செல்வாக்கு காரணமாக சட்டவிரோதமாக பணியில் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக இலங்கையின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடற்படையில் அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் யோஷித ராஜபக்சே சமீபத்தில் கைதாகி இருந்தார். அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் தான் யோஷித ராஜபக்சேவை சட்டவிரோதமாக பணியில் சேர்த்ததோடு, வெளிநாட்டில் பயிற்சி வழங்கியதாக கூறி அந்த நாட்டின் முன்னாள் கடற்படை தளபதி வாசந்தா கரன்னகொடா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகளை விவரிக்கும் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ''யோஷித ராஜபக்சே கடற்படையில் கேடட் எக்ஸிக்கியூட்டிவ் அதிகாரியாக்கான தகுதிகள் இல்லை. இருப்பினும் அவர் பணியில் சேர்க்கப்பட்டார். இதனால் அட்மிரல் ஆஃப் தி ஃப்லீட் கரன்னகொடா கைது செய்யப்பட்டுள்ளார்'' என கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு தலைநகர் கொழும்பில் உள்ள முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வசந்த கரன்னகொடா ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
தற்போது கைதான வசந்த கரன்னகொடா ராஜபக்சே குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 2009ம் ஆண்டில் இலங்கை உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபோது அந்த நாட்டின் கடற்படைக்கு தலைமை தாங்கினார். விடுதலை புலிகள் அமைப்பை அப்போது தான் அந்த நாட்டின் ராணுவ படைகள் தோற்கடித்தன. வசந்த கரன்னகொடாவின் சேவையை பாராட்டி அவருக்கு கடந்த 2019ம் ஆண்டு 'அட்மிரல் ஆஃப் தி ஃப்லீட்' எனும் உயரிய ரேங்க் வழங்கப்பட்டது.
இவர் மீது இப்படியான சர்ச்சை வருவது இது முதல் முறையல்ல. கடந்த 2008, 2009 காலக்கட்டத்தில் இலங்கையின் உள்நாட்டு போர் உச்சகட்டத்தில் இருந்தபோது இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினார். 11 இளைஞர்கள் மிஸ்ஸானது தொடர்பான 'நேவி 11' என அழைக்கப்படும் வழக்கில் இவர் மீது கடத்தில், கொலைக்கு சதி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்த வழக்கிற்கு ஐநா சபை மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் 2021 அக்டோபர் மாதம் இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே இருந்தபோது இவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இலங்கையில் வடமேற்கு மாகாணத்தின் ஆளுநராக பதவி வழங்கினா் என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications